இலங்கைக்கு எதிரான தீர்மானம்.. கோரிக்கையை நிராகரித்த பாஜக... அதிமுக அதிர்ச்சி - அடுத்து என்ன?
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. இதனால் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜகவை தமிழர் விரோத கட்சியாகவே முத்திரை குத்தி வைத்திருக்கின்றனர். பாஜகவின் அத்தனை நடவடிக்கைகளும் தமிழகத்துக்கும் தமிழருக்கும் எதிராகவே இருக்கின்றன.
இதனாலேயே தேர்தல் பிரசாரத்தில் பாஜகவுக்கு எந்த ஒரு முக்கியத்துவம் தராமல் அதிமுக தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வருகிறது என்று தெரிந்த உடன் ராஜ்யசபாவில் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
ஏனெனில் இந்த பிரச்சனை எப்படியும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும்; அது அதிமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகும் என்பதை உணர்ந்து இருந்தது. அதனால் அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை, ராஜ்யசபாவில் வலியுறுத்தினார். ஆனால் பாஜக அரசோ, வழக்கம் போல தமிழகத்தின் கோரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டது.
இப்போது தேர்தல் களத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து விளாசத்தான் போகின்றனர். தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இது அதிமுகவுக்கு மிகப் பெரும் தர்மசங்கடத்தை கொடுத்திருக்கிறது. பாஜகவோ அதை பற்றி கவலைப்படாமல் இருக்கிறது.
பாதிக்கப்படப் போவது அதிமுகதானே!