அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கனுமா.. கவலை வேண்டாம்.. ஆன்லைன் விற்பனை ஆரம்பித்த ஜுவல்லரிகள்
சென்னை: அட்சய திருதியை நாளை கொண்டாடப்படும் நிலையில், ஆன்லைனில் தங்கம் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளன நகைக்கடைகள்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் மே 3ம் தேதிவரை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே பெரிய வணிக வளாகங்கள், நகைக்கடைகள்தான் முதலில் மூடப்பட்டன.

எனவே மார்ச் மாதம் 3வது வாரத்தில் இருந்து நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அதன்பின்னர், தங்க நகை விற்பனை இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் நாளை அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதும், வாழ்வு வளம்பெறும் என்பதும் மக்களிடம் நம்பிக்கையாகும்.
எனவே, ஒரு கிராம் தங்க நகையாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரும்பாலானோர் நினைப்பது உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால், நகை கடைகள் திறக்கவில்லை. ஆனால் அப்படியும் நகைகளை விற்பனை செய்ய நகைக் கடைகள் முன்வந்துள்ளன.
அட்சய திருதியையொட்டி ஆன்லைன் விற்பனையை தொடங்கி இருக்கின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள்.
சம்பந்தப்பட்ட நகைக்கடையின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனில் தங்கத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தின் மதிப்பில் எவ்வளவு கிராம் தங்கம் வேண்டுமோ அதற்கான பணத்தை செலுத்தி அதை பொதுமக்கள் வாங்கலாம்.
ஊரடங்கு காலம் முடிந்ததும், எந்த கடைகளில் பதிவு செய்தனரோ, அந்த கடைக்கு சென்று பொதுமக்கள் தங்க காசாக வாங்கி கொள்ளலாம். நகையாக வேண்டும் என்றால், நகைக்கான செய்கூலி மற்றும் சேதாரத்துக்கு பணம் செலுத்தி வாங்கி செல்லலாம். இதற்காக, Stay Home Stay Safe Buy Online Tritiya 2020 என்ற கேப்ஷனுடன் அவை விற்பனை செய்து வருகின்றன.
ஆன்லைன் மூலம் தங்கம் வாங்குவதில் மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வருடம், அட்சய திருதியை நாளில், காலை 6.13 முதல், மதியம் 1.22 மணிவரை தங்கம் வாங்க நல்ல நேரமாக ஜோதிடர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications