வணக்கம்.. வாங்க வாங்க.. கடு கடு காக்கிகளுக்கு மத்தியில்.. இனி சிரித்த முகத்துடன் வரவேற்பாளர்கள்!
சென்னை: காவல் நிலையங்களில் முதல் முறையாக புகார் அளிக்கச் செல்பவர்களை வரவேற்று தகவல் பதிவதற்காக வரவேற்பாளர்களை நியமிக்க தொடங்கியுள்ளது அரசு.
தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 912 வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறையில் பணியாற்றி பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு வரவேற்பாளர் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் ஸ்டேஷன்களில் வரவேற்பாளர்கள்! சொன்னதை செய்த முதல்வர் ஸ்டாலின்! 912 பேருக்கு பணி ஆணை!
காவல் நிலையங்கள்
காவல் நிலையங்கள் என்றாலே அங்கு சிடுசிடுவென்ற முகத்துடன் காவலர்கள் இருப்பார்கள் என்பதும் புகார்கள் கொடுக்கச் சென்றால் அதை பதிவு செய்ய அலைக்கழிப்பார்கள் என்பதும் சினிமா படத்தை பார்த்து மக்கள் தங்களுக்குள் கட்டமைத்துள்ள ஒரு பிம்பமாக உள்ளது. இதன் காரணமாகவே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிப்பதை பலரும் தவிர்ப்பதோடும் மீறி புகார் அளிக்கச் செல்பவர்கள் ஒரு வித தயக்கத்தோடும் செல்கிறார்கள்.
இனி கவலை வேண்டாம்
இனி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் கொடுப்பது பற்றி கவலை வேண்டாம். உங்களை இன் முகத்தோடு வரவேற்று நடந்த விவரங்களை தகவலாக பதிவு செய்வதற்கு பிரத்யேக முறையில் ஆட்களை பணியமர்த்தியுள்ளது தமிழக அரசு. தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் ஆகிய இரண்டு பெயர்களில் பணியமர்த்தப்பட்டுள்ள நபர்கள் அன்போடு வரவேற்று சிரித்த முகத்துடன் பேசி உங்கள் புகார்களை பதிவு செய்வார்கள்.
கெஞ்ச வேண்டாம்
அதோடு மட்டுமின்றி காவல் நிலைய அலுவல் நடைமுறை பற்றியும் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகனும் நீ கூட வர்றீயா என யாரையும் துணைக்கு அழைத்து கெஞ்ச வேண்டிய தேவை இருக்காது. குறிப்பாக கிராமப்புற காவல் நிலையங்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் / வரவேற்பாளர் பணியிடங்கள் மிகுந்த உதவியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மானியக் கோரிக்கை
2021-22ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் வரவேற்பாளர் பணிநியமனம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 912 பேருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்/பெண்
முதற்கட்டமாக 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள் காவல் நிலைய தகவல் பதிவு உதவியாளர் / வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே உள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வரவேற்பாளர்களின் பணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகார் கூற வருபவர்களை எவ்வாறு அணுகுவது, அவர்களிடம் கனிவாக நடந்துக் கொள்வது பற்றி தனிப்பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.