ராஜீவ் கொலை வழக்கு.. நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை.. சுப்ரீம் கோர்டில் நடந்தது என்ன? வக்கீல் பரபர
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிரசாரத்திற்காகத் தமிழகம் வந்திருந்த போது, கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்
இதற்கிடையே உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்தது. பேரறிவாளனைப் போலவே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி உள்ளிட்ட 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மற்ற ஆறு பேரையும் விடுவிக்க இன்று உத்தரவிட்டது.

வழக்கறிஞர்
இந்த வழக்கில் பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபு தான் இவர்கள் சார்பிலும் ஆஜராகி இருந்தார். இந்தத் தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் பிரபு கூறுகையில், "பேரறிவாளனின் விடுதலை தீர்ப்பைக் குறிப்பிட்டு மற்ற ஆறு பேரை விடுவிக்கக் கோரி இருந்தோம். இது தொடர்பாக தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்திருந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்து உள்ளது.

எதன் அடிப்படையில்
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அவரது வயது, எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார், சிறையில் அவரது நன்னடத்தை, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இவர்களும் அதே வழக்கில் கைதானவர்கள் என்பதால், அதையே காரணமாகச் சொல்லி விடுவிக்கப்பட்டு உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

கருணை சம்பந்தமானது மட்டுமில்லை
அதேபோல நளினி தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் செல்வம் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்த விடுதலை கருணை சம்பந்தமானது மட்டுமில்லை. அவர்களின் நன்னடத்தை, கல்வித் தகுதி, உடல்நிலை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு உள்ளன. மாநில அமைச்சரவை எடுத்த தீர்மானத்தில் ஆளுநர் உரிய முடிவு எடுக்கவில்லை. இப்படி காலந்தாழ்த்துவது தவறானது என்று பல நீதிமன்ற தீர்ப்புகளில் கூறப்பட்டு உள்ளன. இதை எல்லாம் எங்கள் மனுவில் இணைத்து இருந்தோம்.

சிறை கொடுமை
ஆளுநரின் செயல்பாடு என்பது அனைவருக்குமானது. ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது தான் அமைச்சரவையின் தீர்மானம். இதன் அடிப்படையில் தான் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார். இதில் ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்துவிட்டார். இதனால் தான் ஆறு பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அனைவருமே 30 ஆண்டுகளாகச் சிறை கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.

விடுதலை முடிவு
ரவிசந்திரன் சிறையில் சம்பாதித்த பணத்தை தமிழக இருக்கை அமைக்கவும், கஜா புயல் பாதிப்புகளுக்கும் நன்கொடையாக அளித்து இருந்தார். இதுபோன்ற தகவல்களையும் நாங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தோம். அதை எல்லாம் கருத்தில் கொண்டே அவர்களை விடுவிக்கும் முடிவை நீதிமன்றம் எடுத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications