கனமழை எதிரொலி: சென்னையில் 4 முக்கிய சுரங்கப்பாதைகள் மூடல்.. பஸ் சேவையில் மாற்றமா? முக்கிய அறிவிப்பு
சென்னை: தலைநகர் சென்னையில் நேற்றைய தினம் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள.
Recommended Video
தலைநகர் சென்னையில் நேற்றைய தினம் கனமழை கொட்டித்தீர்த்ததன. நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியதால், தலைநகரே ஸ்தம்பித்து போய்விட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 24 செமீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 21 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த இன்னிங்க்ஸ் இருக்கு.. தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை- சென்னையில் பெய்யுமா?
10 மணி நேரம் நீட்டித்த மழை
சென்னையில் நேற்று மதியம் தொடங்கிய கனமழை சுமார் 10 மணி நேரங்கள் வரையும் கூட நீட்டித்தது. கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம் என நகரப்பகுதிகளிலும் சரி, ஆவடி, அம்பத்தூர் எனப் புறநகர்ப் பகுதியிலும் சரி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை நகரமே மீண்டும் வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியது. பல பகுதிகளில் நீர் குளம்போல தேங்கியது.
முதல்வர் ஆய்வு
நேற்று இரவு முதலே நகரில் முக்கிய சாலைகள் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார். மேலும், மழை பாதிப்பு, மழை நீர் அகற்றும் பணிகள் ஆகியவை குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார்.
அணிவகுத்த வாகனங்கள்
இந்த கனமழையால் நகரில் சில முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஒட்டுமொத்த சென்னையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரை கூட முக்கிய சாலைகளில் பல கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கனமழையைக் கருத்தில் கொண்டு தலைநகர் சென்னையில் முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4 சுரங்கப்பாதைகள் மூடல்
மழை நீர்ப் பெருக்கு காரணமாக நகரிலுள்ள 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதாவது துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மெட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இரு சக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை ஆகியவை மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளன. மேலும், கே.கே நகர் ராஜா மன்னார் சாலை, மயிலாப்பூர்- சிவசுவாமி சாலை, ஈவிஆர் சாலை அப்பல்லோ மருத்துவமனை, பர்னபி சாலை சந்திப்பு, அழகப்பா சாலை, அண்ணா ரோட்டரி சர்வீஸ் சாலை, ராஜரத்தினம் மைதானம், பிரகாசம் சாலை, நசரத் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவான வேகத்தில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன
பேருந்து போக்குவரத்து
நேற்று பெய்த கனமழையால் சாலையில் எந்த இடத்திலும் பள்ளம் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல கனமழையால் மாநகர பேருந்து போக்குவரத்து சேவைகளிலும் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மழைநீர் தேங்கியுள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளில் நீரை வெளியேற்றும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மழை நீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்குத் தகுந்தாற்போல சாலைகளைத் தேர்ந்தெடுத்து கவனமாகச் செல்லுமாறும் சென்னை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.