சென்னையில் அதிகரிக்கும் கொரோனா! கவுன்சிலர்களுக்கு உத்தரவிட்ட மேயர் பிரியா ராஜன்! என்னாச்சி?
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கவுன்சிலர்களுக்கு ஒரு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 12வது மண்டலத்தில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடந்தது.
துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் (பொறுப்பு) பிரசாந்த், மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டலத்தில் நடக்கும் பணிகள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
முதியோருக்கு கைவிரிப்பு! எம்பிக்களின் பயணத்துக்கு சலுகை காட்டும் ரயில்வே! 5 ஆண்டு செலவு இவ்வளவா?
பணிகளை விரைந்து முடிக்க...
அப்போது கவுன்சிலர்கள் பேசுகையில், ‛‛சாலை, பாதாள சாக்கடை, குப்பைகள் அகற்றுதல் ஆகிய பணிகள் தாமதமாக நடக்கிறது. தாள சாக்கடை பணி விரைந்து முடிக்க வேண்டும். வார்டு 165ல் சீரமைக்கப்பட்ட இடங்கள் ஆலந்தூரில் இணைக்கப்படாததால் மக்கள் பணிகள் செய்ய முடியவில்லை'' என்றனர். இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்க மேயர் உத்தரவிட்டார். பின்னர் மேயர் பிரியா ராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் எந்த மாதிரியான பணிகள் செய்ய வேண்டும் என்பதற்காக கவுன்சிலர்களிடம் கருத்துகளை கேட்க கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் நடக்கும் பணிகளையும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் விரைவாக ஒன்றின் பின் ஒன்றாக செய்யப்படும்.
கவனமாக பணி செய்ய வேண்டும்
மழைநீர் வடிகால்வாய் முக்கியமான பணி. கவுன்சிலர்கள் தினமும் இந்த பணியை ஆய்வு செய்ய வேண்டும். வெயில் அடிக்கிறது. திடீரென மழை பெய்கிறது. மரங்கள் உள்ள பகுதிகளில் கவனமாக பணி செய்ய வேண்டும். மழை நீர் வடிகால்வாய் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள முடியும். பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கப்படும்.
கண்காணிக்க வேண்டும்
கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. மாநகராட்சி சுகாதார துறை மூலமாக சிறப்பாக பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களை முதலமைச்சர் வழியில் கவுன்சிலர்கள் அக்கறையுடன் விசாரிக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளார்களா? என கண்காணிக்க வேண்டும். நோய் பாதித்தவர்கள் வெளியே சுற்றுவதால் பரவல் அதிகரிகமாகிறது. இதனால் இதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.
சென்னையில் பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி மொத்தம் 2,385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ஓமனில் இருந்தும், இன்னொருவர் அமெரிக்காவில் இருந்தும் வந்தவரும் அடங்குவர்.
12,158 பேருக்கு சிகிச்சை
அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று குணமாகி 1,321 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பலி எதுவும் இல்லை. இன்றைய பாதிப்போடு சேர்த்து தற்போது தமிழகத்தில் மொத்தம் 12,158 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கையும் அடங்கும். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது தான் காரணமாக உள்ளது.
சென்னையில் பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று மொத்தம் 2,385 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து 1025 ஆக பதிவாகி இருந்தது. பல மாதங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பாதிப்பு 1000யை கடந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 597 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் தற்போது 5,173 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.