உயரும் கொரோனா..கோயில்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்.. தரிசனத்திற்கு கிளம்பும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள முக்கிய கோயில்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. இருப்பினும், அதன் பின்னர் சில மாதங்களாக மாநிலத்தில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.
இந்தச் சூழலில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட பின்னர், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா வேக்சின் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இல்லை.. என்ன காரணம் தெரியுமா? முக்கிய தகவல்
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இதையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வாகனங்களில் அத்தியாவசிய பணிகளைத் தவிர இதர பணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு மேலும் கடுமையாக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வார இறுதி நாட்கள்
இதனிடையே கோயில்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் -அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த மூன்று நாட்களில் தான் வழிபாட்டுத் தலங்களில் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக வைரஸ் பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலேயே தமிழக அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில்
இந்தச் சூழலில் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வருவோர் 2 டோஸ் வேக்சின் சான்றிதழைக் காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்கரான் நோய் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு 10.01.2022 (திங்கள் கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேக்சின் சான்றிதழ் வேண்டும்
சுவாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியதற்கான ஆதாரமாகச் சான்று அல்லது கைபேசியில் பெறப்பட்ட குறுஞ்செய்தியைக் காண்பித்தால் மட்டுமே திருக்கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தற்போது, கோவிட் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு, முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவாமல் இருக்க உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
அதேபோல மாநிலத்தில் மற்றொரு முக்கிய கோயிலான திருச்செந்தூரிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலை 5 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கத்தேர் வலம் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் கடற்கரைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.