கனமழை ரிட்டன்ஸ்.. தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் போட்டுத்தாக்கும் கனமழை.. எப்போது குறையும்
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தலைநகர் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நகர்ப்பகுதிகளில் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் நாளைய தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் மழை
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடியே தற்போது நகரில் பல முக்கிய இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, பாரிமுனை, கொளத்தூர், புதுப்பேட்டை, சூளைமேடு, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இருளில் மூழ்கிய எழும்பூர் ரயில் நிலையம்
அதேபோல பாலவாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை மெரினா, சேத்துப்பட்டு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் எழும்பூர் ரயில் நிலையத்தில் முற்றிலுமாக மின் தடை ஏற்பட்டது. இதனால் அங்கு வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். நகர்ப் பகுதிகளில் மட்டுமின்றி சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், தரமணி, ஆதம்பாக்கம், ஆவடி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

ரெட் அலர்ட்
இப்படி நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கனமழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவே கனமழை அதிகரித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு
முன்னதாக சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications