வயது மூப்பால் சீட் இல்லை என பரவிய தகவல்.. காட்பாடியில் போட்டியிடுவேன் எனக் கூறிய துரைமுருகன்!
சென்னை: வயது மூப்பு காரணமாக இந்த முறை காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனுக்கு சீட் கிடைக்காது என்று செய்திகள் வலம் வந்த நிலையில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தி உள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மகிமண்டலத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் நலதிட்ட உதவிகள் மற்றும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரூ.3 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய அமைச்சர் துரைமுருகன், "நீங்கள் எனக்கு போடும் ஓட்டு ஒரு போதும் வீணாகாது. இந்தப் பகுதிக்கு தாலுகா அரசு மருத்துவமனை, அரசுக் கல்லூரி, தரமான சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திட்டமிட்டு செய்து வருகிறோம். அது தவிர, முக்கிய திட்டமான சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வரப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
யாரும் கேட்காமலேயே மகளிர் இலவச பேருந்து, காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களை எல்லாம் தாயுள்ளத்தோடு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இதுவரை மாதம் ஆயிரம் ரூபாய் வாங்காதவர்களுக்கும் இனிமேல் வரும். தேர்தல் முடிந்தாலும் திமுக ஆட்சி தான் மீண்டும் வரும். அந்த ஆட்சியில் இந்தப் பகுதியில் பெரிய தொழிற்பேட்டை அமைப்பது என் கனவு. அதற்காக இந்த அரசுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது, மகிமண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் கோயில் கட்ட நிதி கோரினார். அதற்கு துரைமுருகன், "நிதி கேட்பதற்கான நேரம் இது இல்லை. எல்லாரும் ஓட்டு போட்டு நான் ஜெயித்தால் கண்டிப்பாக செய்வேன். அப்படி நான் செய்யாவிட்டால் தெய்வம் எனக்கு கூலி கொடுக்கும். அதே மாதிரி நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் தெய்வம் உங்களுக்கும் கூலி கொடுக்கும். நமக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். நான் வென்றவுடன் கோயில் கட்ட நிதி ஒதுக்கப்படும்" என்று சிரித்தபடியே கூறினார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. வயது மூப்பு காரணமாக இந்த முறை காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகனுக்கு சீட் கிடைக்காது என்று செய்திகள் வலம் வந்தன. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பியாக உள்ள நிலையில், கட்சியில் மிகவும் சீனியரான துரைமுருகனுக்கு சீட் வழங்கஓஅடாது எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தி உள்ளார் அமைச்சர் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications