"மோசம்".. தாறுமாறாக எகிறிடுமே.. தடையை வேற நீக்கிட்டாங்களே.. உடனே முடிவெடுங்க.. டிடிவி தினகரன் பளீர்
புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறார் டிடிவி தினகரன்
சென்னை: தமிழக அரசு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்குள் இந்த புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்க உரிய சட்டம் கொண்டுவருவது குறித்தும் சட்டவல்லுநர்களுடன் தமிழக அரசு உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய முடிவினை எடுத்திடவேண்டும் என்றும் அமமுகவின் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைபபொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
வருடந்தோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வந்தாலும், இதுபோன்ற உத்தரவுகளை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

அப்பீல்கள்
இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில், அப்பீலும் தாக்கல் செய்யப்பட்டது... நேற்றைய தினம் இது தொடர்பான வழக்கில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டது..

அதிகாரங்கள்
அதாவது, உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை என்றும், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.. புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை, தடை விதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

அவசர நிலை
உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்ததுடன், இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.. இந்த அதிரடி உத்தரவானது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. பல்வேறு தரப்பினர், அரசியல் கட்சிகளும் இதுகுறித்த தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

தாறுமாறாக உயரும்
சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது என்று டிடிவி தினகரனும் கருத்து தெரிவித்துள்ளார்.. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. அதில், "குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் புழக்கம் தாறுமாறாக அதிகரித்திருக்கிற நிலையில், புகையிலைப் பொருட்களுக்கான இந்த தடை நீக்கம் மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

உடனே முடிவு
எனவே, இது தொடர்பாக மத்திய அரசோடு கலந்து ஆலோசித்து தமிழக அரசு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களின் விற்பனையைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், தமிழ்நாட்டிற்குள் இந்த புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்க உரிய சட்டம் கொண்டுவருவது குறித்தும் சட்டவல்லுநர்களுடன் தமிழக அரசு உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய முடிவினை எடுத்திடவேண்டும்" என்று டிடிவி தினகரன் தன்னுடைய ட்வீட்களில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications