"ஐஐடி வேலை.." 111 பவுன் அள்ளித் தந்த பெண் வீட்டார்! அப்புறம்தான் தெரிந்தது லீலை! சென்னையில் பரபரப்பு
சென்னை: மனைவி மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து, ஐஐடியில் வேலை செய்வதாக மோசடி செய்து, பெண் மருத்துவரை திருமணம் செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் மகள், அசோக் நகர் மாநகராட்சி சுகாதாரத்துறையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான பிரபாகரன் என்பவருக்கும், கடந்த 2020 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
அப்போது ஐ.ஐ.டியில் பணியாற்றுவதாக கூறிய மணமகன் பிரபாகரனுக்கு, பெண் வீட்டார் 111 பவுன் நகையும், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஐஐடி வேலை பொய்
இந்நிலையில், திருமணம் ஆன சில மாதங்களிலேயே தனது கணவருக்கு மதுபழக்கம் இருப்பது தெரியவந்ததால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். மேலும் தினந்தோறும் இரவில் மதுகுடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டதால், கணவர் மீது பெண் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பற்றி விசாரித்தபோது, ஐ.ஐ.டியில் பணிபுரிந்து வருவதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்தது, அந்த பெண் மருத்துவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

2வது திருமணம்
இதற்கிடையில், பிரபாகரனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதும், அதை மறைத்து தன்னை 2-வதாக திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் பெண் மருத்துவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். மேலும், வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று கபளீகரம் ஆடியுள்ளார். இதுகுறித்து கேட்டால், பெண் டாக்டரை தினசரி அடித்து துன்புறுத்தி, சித்தரவதை செய்து வந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், பெண் மருத்துவரின் குடும்பத்தினரையும் பிரபாகரன் மிரட்டியுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்
இதற்கு மேலும் பொறுத்துகொள்ள முடியாது என முடிவெடுத்த அந்தப் பெண் மருத்துவர், சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தான் ஏமாற்றப்பட்டதாக கணவர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார், வரதட்சனை கொடுமை, ஆபாசமாக பேசுதல், நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர் கதையாகும் மோசடிகள்
திருமண மோசடியால் கைது செய்யப்படும் சம்பவங்களும், அதுதொடர்பான செய்திகளும் ஊடகங்ககள் நாள்தோறும் வெளியாகி அம்பலப்படுத்தப்பட்டும், சென்னை போன்ற பெருநகரில், இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்கதையாகி வருவதுதான் ஆச்சரியமாக உள்ளது.












Click it and Unblock the Notifications