அகால மரணம்...போஸ்டர் அடித்து உடல் நல்லடக்கம்...புதைத்த பாட்டி உயிருடன் வந்த அதிசயம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி பகுதியில் உயிரிழந்த மூதாட்டி திடீரென உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது தாயார் இறந்து விட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி, தாயாரின் உடலை அடக்கம் செய்த மகனுக்கு தாய் உயிருடன் வந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டவரின் உடல் யாருடையது என்று விசாரணை செய்து வருகின்றனர்.
ஒன்று.. இரண்டல்ல.. 'அயர்லாந்தில் 50 பேட்டரிகளை விழுங்கிய மூதாட்டி'.. மருத்துவர்கள் மீட்டது எப்படி?
கோயில்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியின் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா. 72 வயதான மூதாட்டியான இவர், கணவனை இழந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். மகனும் வேலைக்கு சென்றுவிடவே, தனியாக இருக்கும் இவர் அடிக்கடி கோயிலுக்கு சென்று வந்திருக்கிறார். கோயிலுக்கு செல்வது ஒரு வழக்கமாகவே இவருக்கு இருந்துள்ளது. இதே போல சம்பவம் நடந்த நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார்.
விபத்து
ஆனால் இரவு நீண்ட நேரம் ஆகியும் சந்திரா வராததால், அவரது மகன் எல்லா இடங்களிலும் தேடியுள்ளார். அப்போதுதான் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் மார்கத்தில் வயதான மூதாட்டி ஒருவர் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்த மூதாட்டியை காண சென்றுள்ளனர். விபத்தில் மூதாட்டியின் உடல் அடையாளம் தெரியாததால், உருவத்தை வைத்து தனது தாய்தான் என உடலை பெற்று வந்துள்ளனர்.
நல்லடக்கம்
மரணம் குறித்து உற்றார் உறவினர்களுக்கு சொல்லி அனுப்பப்பட்டுள்ளது. எல்லோரும் அடுத்த நாள் துக்க வீட்டுக்கு வந்துள்ளனர். ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. உடல் விபத்தில் ஏற்கெனவே படுகாயமடைந்துள்ள நிலையில், அதனை நீண்ட நேரம் வைத்திராமல் உடனடியாக மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர். எல்லாம் முடிந்து பின்னர் மகன், உறவினர்கள் வீடு திரும்பி சோகத்தில் அமர்ந்திருந்துள்ளனர்.
அதிர்ச்சி
அப்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்ததாக கருதப்படும் சந்திரா திடீரென உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சிலர் பயந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர். மகனுக்கு அதிர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மகிழ்ச்சி மறுபுறம் இருந்துள்ளது. இதனையடுத்து நடந்த விஷயத்தை சந்திரா கூறியுள்ளார். உயிரிழந்தது தான் இல்லையென்றும் விளக்கியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்துள்ள நிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.