ஆன்லைன் சூதாட்டம்.. அதிகரிக்கும் தற்கொலைகள்..! - கண்டிக்கும் அன்புமணி ராமதாஸ்
சென்னை: திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விமர்சித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தடை சட்டத்தை வரவுள்ள நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதுவை மாநிலம் குமராப்பாளையத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமர்நாத் ஆன்லைன் ரம்மியில் ரூ.30 லட்சத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த 3 மாதம் கருவுற்ற மனைவி ஆதரவற்றவராகியிருக்கிறார் என கூறியுள்ளார்.

அதிகரிக்கும் தற்கொலை
கடந்த சில வாரங்களுக்கு முன் தாம்பரம் ஆனந்தபுரத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால் தமிழகம் மற்றும் புதுவையில் தற்கொலைகள் தொடர்கதையாகி விட்டன என பதிவிட்டுள்ளார்.

சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது
மேலும், தமிழ்நாட்டில் சூதாட்டத் தடை சட்டம் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட பிறகு தற்கொலைகள் குறைந்தன. அந்த சட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்த பிறகு தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது; தற்கொலைகள் அதிகரித்து விட்டன என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

சூதாட்டத்தை அனுமதிக்க முடியாது
திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு விசாரணை வரவில்லை. அது வரைக்கும் தற்கொலைகள் தொடருவதை அனுமதிக்க முடியாது எனவும் அன்புமணி பதிவிட்டுள்ளார்.

சூதாட்ட தடைசட்டம்
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளைத் தடுக்க புதிய திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். புதுவை அரசும் அம்மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications