திறப்புக்கு தயாராகும் மேட்டூர் அணை.. காவிரி பாசன கால்வாய்கள் நிலை என்ன? - அன்புமணி கேள்வி
சென்னை: மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதால் காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், உழவர்கள் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவது உழவர்களை கவலையடையச் செய்துள்ளது.

மேட்டூர் அணை
குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாதது, கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் குறித்த காலத்தில் திறந்து விடப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பல ஆண்டுகளில் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பது சாத்தியமாகவில்லை.

கர்நாடகாவில் மழை பெய்ய வாய்ப்பு
இயற்கையின் கொடை காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து திட்டமிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், ஒப்பீட்டளவில் காவிரி பாசன மாவட்டங்களில் அதிகபரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இன்றைய நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு சுமார் 9,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், இந்த மாத இறுதியில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கணிக்கப் பட்டிருப்பதாலும் நடப்பாண்டிலும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

காவிரி கடைமடை பகுதிகள்
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அடுத்த சில நாட்களில் காவிரி கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடைவதை உறுதி செய்வதில் தான் குறுவை சாகுபடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதற்காக கடைமடை பாசன பகுதிகள் வரை தூர்வாரப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். காவிரி ஆறு தூர்வாரப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழ்நாடு அரசு, காவிரி பாசனப் பகுதியைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,964 கி.மீ. நீள பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததுடன், அதற்காக ரூ.80 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்தது.

தூர்வாரும் பணிகள் பாதிப்பு
காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. அதன் பின் மூன்று வாரங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்னும் தூர்வாரும் பணிகள் தீவிரமடையவில்லை. அனைத்து பகுதிகளிலும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அரசு தீவிரப்படுத்த வேண்டும்
இதே வேகத்தில் சென்றால் மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக பாசனக் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரி முடிக்கப்பட வாய்ப்பில்லை. கடந்த சில ஆண்டுகளாக பாசனக் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால், பாசனக் கால்வாய்களின் மட்டம் ஆற்றின் மட்டத்தை விட அதிகரித்து, அவற்றில் தண்ணீர் பாய்வது தடைபட்டது. அதனால் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தாமதமாகவே தண்ணீர் சென்றது. இந்த முறையும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்களை தூர் வாரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

ஆயத்தமாக வேண்டும்
காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி நீரை எதிர்பார்த்து ஒரு தரப்பு உழவர்கள் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகியுள்ள நிலையில், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. மேட்டூர் அணை திறக்கப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே அனைத்து தரப்பு உழவர்களும் முழு வீச்சில் தயாராவார்கள். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியாக இருப்பதாலும், தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருவதாலும் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடுக!
எனவே, ஜூன் 12 ஆம் தேதிக்கு இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில் மேட்டூர் அணை திறப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு முன்கூட்டியே வெளியிட வேண்டும். அதேபோல், குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரங்கள் உள்ளிட்டவையும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications