ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாமக போட்டியிடாது! எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது! அன்புமணி அறிவிப்பு!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதேபோல் ஈரோடு கிழக்குத் தொகுதியில் எந்தக் கட்சிக்கும் பாமகவின் ஆதரவு கிடையாது என்பதையும் அவர் மிகத் தெளிவாக கூறிவிட்டார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கையெழுத்துடன் பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;
மதில் மேல் பூனையாக பாஜக.. 'சுத்து’ போடும் ஓபிஎஸ், ஈபிஎஸ்! டெல்லியில் திரளும் லீடர்கள்!
ஈரோடு கிழக்கு
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி
'' இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சித் தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத் தேர்தல் நடத்தத் தேவையில்லை; அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம்'' என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை
அதன்படியே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தங்களிடம் எந்தக் கட்சியினரும் ஆதரவு கோரி வர வேண்டாம் என்பதை அவர் பாமக வெளிப்படையாகவே கூறிவிட்டது.
அதிமுக -திமுக
பாமகவின் ஆதரவை பெற திமுக, அதிமுக தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது அக்கட்சியின் தலைமை. பாமகவை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம், அமமுக என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.