உங்க சண்டையால் பாதிக்கப்படுவது ‘இவங்க’ தான்.. என்றைக்கு தீரும் பஞ்சாயத்து! அன்புமணி அதிரடி கேள்வி
சென்னை : மத்திய, மாநில அரசு மோதலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது எனவும், தமிழக அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்களை உடனே நியமிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக் ஷா) மத்திய அரசு நிதியை நிறுத்தியதால் 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன், செய்முறைப் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 226 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வேளாண்மை, இயந்திரவியல், மின்னணுவியல், கணக்குப் பதிவியல், தட்டச்சு உள்ளிட்ட தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 8,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை தவிர்த்து,செய்முறை மற்றும் வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி அளிக்க 'அவுட்சோர்சிங்' முறையில் மாதம் ரூ.22,000 ஊதியத்தில் 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான ஊதியம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியில் இருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழகம் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காததால், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு ஜூன் மாதம் விடுவிக்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு நிறுத்தியது.
இதையடுத்து 451 வேலைவாய்ப்புத் திறன் பயிற்றுநர்களையும் பள்ளிக் கல்வித்துறை பணியில் இருந்து நிறுத்தியது. இதனால் தொழிற்கல்வி மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன், செய்முறை பயிற்சி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்களை உடனே நியமிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை என்று ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
தொழில்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி தொழில்பாடங்களுக்கு தேர்வும் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் தொழில் பயிற்றுநர்கள் நியமிக்கப்படாதது மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும். இது தெரிந்திருந்தும் இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதை அனுமதிக்க முடியாது.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காதது தான் அனைத்துச் சிக்கல்கலுக்கும் காரணம் ஆகும். ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை வழங்குவதற்காக புதிய கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்; பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும்.
அதேநேரத்தில், மத்திய அரசு நிதி வழங்காததைக் காரணம் காட்டி, வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை வழங்கும் தொழில் பயிற்றுநர்களை நியமிக்காமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதை அனுமதிக்க முடியாது. ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு தொழிற்பயிற்றுநர்களை நியமிக்க நிதியில்லை என்பதை நம்ப முடியவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. எனவே, இனியும் தாமதிக்காமல் அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications