படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்! அரசு இதை செய்யனும் - அன்புமணி ஐடியா
சென்னை: தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வடமாநிலத்தவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதை தடுப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசிடம் ஒரு யோசனை தெரிவித்து இருக்கிறார்.
டாடா குழுமம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சுமார் ரூ.4,684 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை அமைத்து இருக்கிறது.
இந்தத் தொழிற்சாலையின் மூலமாக மட்டும் சுமார் 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைக்கப்படுவதற்கு பலர் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இணையுமா? அன்புமணி பிளான் 'சீக்ரெட்’ - போட்டு உடைத்த டாப் நிர்வாகி!
வேலை வாய்ப்பு
இந்த நிறுவனத்தில் பணியில் சேர தமிழ்நாடின் பல்வேறு மாவட்டங்களில் பட்டதாரிகள் மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஓசூர் டாட்டா எலெக்ட்ரானிக் தொழிற்சாலையில் தமிழர்களை காட்டிலும் வட மாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
அன்புமணி கருத்து
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "ஓசூர் அருகே அமைக்கப்பட்டு வரும் டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தவருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
2,348 பேருக்குதான் வேலையா?
இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை. டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மொத்தமுள்ள வேலைவாய்ப்புகள் 18,000. ஆனால், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,348 பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அமைச்சர் அளித்த உறுதி
டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் 80% தமிழர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகம் உறுதியளித்திருப்பதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்து இருக்கிறார். ஆனால், அதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை.
நம்ப வேண்டியதில்லை
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. இதை தமிழ்நாடு அரசே செய்ய முடியும் என்ற நிலையில், தனியார் நிறுவனங்கள் அளிக்கும் உத்தரவாதமற்ற உறுதிமொழிகளை நம்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
சட்டம் இயற்றுங்கள்
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காக, தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்டத்தை வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்." என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.