சென்னை மாதவரம் லாட்ஜில் சார் பதிவாளர் கிடந்த கோலம்.. அலறி ஓடி வந்த ரூம்பாய்.. திடுக்கிடும் தகவல்
சென்னை: சென்னை மாதவரம் தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் ஆந்திர மாநில சார்-பதிவாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர் திடீரென விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
சென்னை மாதவரம் ஆந்திர மாநிலத்தை இணைக்கும் முக்கியமான நெடுஞ்சாலையில் இருக்கிறது. இங்கு ஆந்திர மாநில பேருந்துகள் செல்வதற்காகவே பேருந்து நிலையம் ஒன்று செயல்படுகிறது. இந்த பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மதியம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்து அறை எடுத்து தங்கி இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு விடுதி ஊழியர் ஒருவர் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர், இது குறித்து உடனடியாக மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்தார்? என்ற தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சொத்து குவிப்பு வழக்கில் ஆந்திர லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு பயந்து தலைமறைவாக இருந்த ஆந்திர மாநில சார்பதிவாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் பெயர் சீனா நாயக் (வயது 43), இவர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கோணி பேட்டா பகுதியைச் சேர்ந்தவர். இவர் கோணி பேட்டா சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக வேலை செய்து வந்திருக்கிறார். சார்பதிவாளர் சீனா நாயக் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு போடப்பட்டுள்ளது. ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் சீனா நாயக்கை கைது செய்து விசாரணை நடத்த தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு பயந்து அவர் தப்பி ஓடி தலைமறைவாகி பின்னர், சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருந்துள்ளார். அப்போது ஏற்பட்ட மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட சார்பதிவாளர் சீனா நாயக்குக்கு சுஜாதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications