தை அமாவாசை.. மெரினாவில் குளிக்க போன 5 பேர்.. கரை ஒதுங்கிய சடலம்... கதறிய மக்கள்!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குளித்த ஆந்திர மாநில இளைஞர்களை ராட்சத அலை இழுத்துச் சென்றது. இதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இரண்டு பேர் அலையில் சிக்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரை அழகும் அற்புதமும் நிறைந்த உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும். இங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை யாரும் பொருட்படுத்துவது இல்லை.
ஆவேச அலைகள் இல்லாத நாட்களில் பிரச்சனைகள் வருவது இல்லை. ஆனால் அமாவாசை சமயங்களில் அலைகள் கடலில் கடுமையாக எழும்பும்.
ராட்சத அலை
அந்த நேரத்தில் கடலில் குளித்தால் ஆபத்தை சந்திப்பார்கள். நேற்று தை அமாவாசை என்பதால் கடலில் அலைகள் ஆக்ரோசமாக இருந்தன. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் குளித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அலையில் சிக்கி மாயமாகினர். ஒருவரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது.
கடலில் குளித்தனர்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சிவபாஜி (18), ஆவடியில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர், நேற்று சக மாணவர்களான ஆந்திராவை சேர்ந்த ஆகாஷ் (18), ராஜசேகர் (19), சிவபிரசாத் (18), கோபிநாத் (18) ஆகியோருடன் கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர், 5 பேரும் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்து, கடலில் குளித்துள்ளார்கள்.
3 பேர் மாயம்
அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி சிவபாஜி, ஆகாஷ், கோபிநாத் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். இதை பார்த்த நண்பர்கள் ராஜசேகர் மற்றும் சிவபிரசாத் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவசத்துடன் கடலில் இறங்கி 3 மாணவர்களை தேடினர்.
2 பேர் கிடைக்கவில்லை
அதில் சிவபாஜி மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். ஆகாஷ் மற்றும் கோபிநாத் ஆகியோர் கிடைக்கவில்லை. மீனவர்கள் உதவியுடன் அவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர். அண்ணாசதுக்கம் போலீசார், மாணவன் சிவபாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.