நாளை வரப்போகும் மேஜர் செய்தி.. டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்படுகிறதா? அண்ணாமலை சொன்ன தகவல்!
சென்னை: மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து நாளை (ஜனவரி 23) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் என டெல்லியில் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உடனான சந்திப்புக்குப் பின் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகளுடன் இன்று மத்திய அமைச்சரை சந்தித்தார் அண்ணாமலை.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டதை அடுத்து, இந்த திட்டத்துக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் கடும் எதிர்ப்பால், தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு
மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக எம்.பிக்களும் மத்திய அரசிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தினர். தொடர் அழுத்தம் காரணமாக திட்டத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரிட்டாபட்டி பகுதியை சுற்றியுள்ள 48 கிராமங்களையும் தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்கும் வகையில் அரிட்டாபட்டி போராட்டக் குழுவைச் சேர்ந்த விவசாயிகளை பாஜக தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அண்ணாமலை
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் குழுவை பாஜக சார்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் விவகாரத்தில் புதன்கிழமை (இன்று) மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகும். தொடக்கத்தில் இருந்தே இந்த பிரச்சனையில் தீர்வு காணவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அண்ணாமலை, கோமியம் குறித்து வகுப்பறையில் ஐஐடி இயக்குநர் பேசாததால், அதுகுறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டாம். அதை முடித்துக் கொள்வோம். இது தொடர்பாக முன்னாள் ஆளுநர் தமிழிசையின் விளக்கத்துக்கும் நான் கருத்து கூற விரும்பவில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து." என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "ஆர்கேநகர் காவல் நிலையம் முன் கூலித் தொழிலாளி தீக்குளித்த சம்பவத்தை பார்க்கும்போது சாமானிய மனிதர்களுக்கு அச்சம் ஏற்படும். அவரது புகாரை ஏற்க போலீசார் மறுத்தனரா என்பது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு தெளிவுபடுத்த வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை இன்று பாஜக நிர்வாகிகள், டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சந்தித்தனர். அப்போது, டங்ஸ்டன் சுரங்கம் வராது என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உடனான சந்திப்புக்குப் பின்னர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "தன்னை நம்பிய மக்களை பிரதமர் கைவிடவில்லை. போராட்டக் குழுவினருக்கு பாஜக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றித் தருகிறோம். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மகிழ்ச்சியான செய்தி, அதிகாரப்பூர்வமாக நாளை வரும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications