மோடி சொல்லிட்டாரு.. ரெடியாகுங்க.. அலெர்ட் செய்த அண்ணாமலை! பிப். 2 நைட்டே பட்ஜெட் ஹேண்ட்புக்.. ஓஹோ!
மாநிலம் முழுவதும் பட்ஜெட் விளக்கக் கூட்டங்களை நடத்துவது பற்றி ஆலோசனை வழங்கியுள்ளார் அண்ணாமலை
சென்னை : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அரசியல் லாபம் கிடைக்கும் வகையில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்தி, பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், பட்ஜெட்டை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் நடந்த பாஜக தேசிய செயற்குழுவில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் விளக்கக் கூட்டங்களை நடத்துவதற்கான குழுவை மாநில அளவிலும், மாவட்ட வாரியாகவும் அமைத்துள்ளது தமிழ்நாடு பாஜக.
“கண்டுக்காதீங்க”.. டெய்லி என் மீது அவதூறு! விஷமத்தனம் - பாஜகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ் கடிதம்
பட்ஜெட் விளக்க கூட்டங்கள்
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ப்பட இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இதையொட்டி மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் விளக்க தமிழ்நாடு பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநில அளவில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் கனகசபாபதி, நாராயணன் திருப்பதி, தொழில் பிரிவு தலைவர் அசோக் சுந்தரேசன் ஆகியோர் கொண்ட குழுவும், மாவட்ட அளவில் 3 பேர் கொண்ட குழுவும் பாஜகவில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பேச்சு
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் மத்திய அரசின் பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை விளக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் குரல் குழு கூட்டத்தில் பேசினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்போது, இந்த கூட்டங்களை எப்படி நடத்துவது என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்கினார்.
மோடி சொன்ன விஷயம்
அண்ணாமலை பேசுகையில், தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது மத்திய அரசின் பட்ஜெட் சாமானிய மக்களுக்கு புரியும்படி உள்ளது, அதனை கடைகோடி மக்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றார். இதனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்து 15 நாட்களுக்குள் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடத்தி பட்ஜெட்டில் உள்ள அம்சங்களை மக்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும்.
அன்று இரவே
பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து ரோட்டரி சங்கங்கள், லயன்ஸ் கிளப்கள், தொழில் அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், மேலாண்மை கல்லூரிகளிலும் பேச வேண்டும். பட்ஜெட் விளக்கக் கூட்டங்களில் எதை எதைப் பேச வேண்டும் என்பதை மாநிலக்குழு முடிவு செய்து கையேடு தயாரித்து மாவட்ட குழுக்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று பிப்ரவரி 2ஆம் தேதி இரவே வழங்க வேண்டும்.
மக்களிடம் கொண்டு சேருங்கள்
பட்ஜெட் விளக்க கூட்டங்களில் பேசும்போது நாங்கள் இலவசங்கள் தரமாட்டோம், ஓட்டுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசமாட்டோம், நாட்டின் நலனுக்காகவே செயல்படுகிறோம் என்பதை மக்களுக்கு உறுதியாகத் தெரிவிக்க வேண்டும். மத்திய பட்ஜெட் குறித்து விளக்குவதுடன், மாநில அரசின் தோல்விகளையும் மக்களிடம் கொண்டு செர்க்க வேண்டும்.
அரசியல் லாபம்
பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் குறித்து மாவட்ட குழுக்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தி சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்தும் மக்களிடம் விளக்கமாகச் சொல்ல வேண்டும். பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்களால் பாஜகவுக்கு மிகப்பெரிய அரசியல் லாபம் கிடைக்க வேண்டும். அதற்கு இந்த 15 நாட்களை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.