கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்... பாஜக தலைவர் அண்ணாமலை கையில் எடுக்கும் புதிய அஸ்திரம்..!
சென்னை: கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்கள் மத்தியில் பாஜகவின் கொள்கைகளையும், மத்திய அரசின் நடவடிக்கைகளையும் கொண்டு சேர்க்கும் திட்டத்தில் இருக்கிறார் அண்ணாமலை.
முதற்கட்டமாக தென்மாவட்டங்களில் இந்தப் பணியை தொடங்கியுள்ள அவர், கணிசமான எண்ணிக்கையில் பாஜகவில் இளைஞர்களை உறுப்பினர்களாக்க செயல்திட்டம் வகுத்து வருகிறார்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவுரமான எண்ணிக்கையில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை கைப்பற்றவும் பாஜக தலைவர் அண்ணாமலை முனைப்பு காட்டி வருகிறார்.
ஆவணி மூலம் திருவிழா: கோபத்தோடு சாபம் கொடுத்த கருவூர் சித்தருக்கு ஜோதியாக காட்சியளித்த நெல்லையப்பர்
தமிழக பாஜக
தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் மேடைக்கு மேடை பேசி வந்த நிலையில், பாஜக சார்பில் 4 பேர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். மேலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை காட்டிலும் பாஜக தான் திமுக அரசை தொடர்ந்து அதிகம் விமர்சித்தும் கருத்து தெரிவித்தும் வருகிறது. கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவினர் தமிழகத்தில் கட்சியை வளர்க்க தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
பாஜக கொள்கைகள்
அந்த வகையில் பாஜகவின் கொள்கைகள், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களை அடிக்கடி சந்தித்து கலந்துரையாடும் திட்டத்தில் இருக்கிறார் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாஜக குறித்த தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் அவர் கடந்த வாரம் தூத்துக்குடியில் இந்த புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறார்.
இளைஞர்கள்
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட அவர் தனியார் இடத்தில் கல்லூரி மாணவர்களை சந்தித்து அவர்களுடன் அரை மணி நேரம் கலந்துரையாடியுள்ளார். அப்போது பிரதமர் மோடி குறித்தும் பாஜகவின் தேவை குறித்தும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக பாஜகவில் அதிகளவில் இளைஞர்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அனுமதி மறுப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னெடுக்கும் இந்த புதிய முயற்சிக்கு திமுக முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயர்க்கல்வித்துறை அமைச்சகம் மூலம் கலந்துரையாடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், தனியார் இடத்தில் வைத்தாவது கல்லூரி மாணவர்களை சந்திக்க தயாராக உள்ளது அண்ணாமலை டீம்.