வராண்டாவில் படுக்க வைக்கப்பட்ட தாய்-குழந்தை! விழுப்புரம் அரசு மருத்துவமனை அவலம்! அண்ணாமலை பாய்ச்சல்
சென்னை: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பச்சிளங்குழந்தையும், தாயும் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியிருக்கிறார் அண்ணாமலை.
அரசு மருத்துவமனைகள் மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதனிடையே வீடியோ பதிவுடன் அண்ணாமலை தனது சமூக வலைதளப்பக்கங்களில் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில், படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக, அறுவைசிகிட்சை மூலம் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளங்குழந்தை தன் தாயுடன், எந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் காட்சி கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.''
''உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு என்று ஊரை ஏமாற்றி வருகிறது ஊழல் திமுக அரசு. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்கிறது. தொடர்ந்து துயர சம்பவங்கள் நடந்த பிறகும், அரசு எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. ''

''ஊழல் வழக்கில் கைதான சாராய அமைச்சருக்குக் கூட தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை வேண்டும் என்று கேட்டதையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்கள் கட்சியினர் நடத்திவரும் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்க, ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளை, பாதாளத்துக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறதா திமுக?'' இவ்வாறு அண்ணாமலை வினவியுள்ளார்.












Click it and Unblock the Notifications