கோவை கார் வெடிப்பு.. அரசுக்கு பாஜக சப்போர்ட் பண்ணும்! ஸ்டாலினை பாராட்டி அண்ணாமலை கொடுத்த “3 ஐடியா”
சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷ் முபின் என்ற நபர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிய முதலமைச்சரின் முடிவை வரவேற்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 3 யோசனைகளை வழங்கியுள்ளார்.
கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், "கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (26-10-2022) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

என்.ஐ.ஏவுக்கு மாற்றம்
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதிய காவல் நிலையம்
கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும்; மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும் முடிவு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

சிசிடிவி கேமரா
கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும் ஸ்டாலின் ஆணையிட்டார்.

இன்ஃபார்மர்கள்
இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார்.

அதிகாரிகள்
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, காவல் துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) திரு. சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

யோசனை
1) தேச விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள். 2) தமிழக காவல்துறையின் உளவுத்துறை உலக புகழ் பெற்றது. சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின்பு உளவுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுங்கள்.

போலீஸ் சுதந்திரம்
3) திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள்.

பாஜக உறுதுணை
மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தமிழ்நாடு பாஜக உறுதுணையாக இருக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications