சென்னையில் மீண்டும் கொடூரம்.. "ராட்வைலர் + பாக்ஸர்.." 12 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்!
சென்னை: தலைநகர் சென்னையில் அதிர்ச்சி தரும் வகையில் மீண்டும் ஒரு நாய்க் கடி சம்பவம் அரங்கேறியுள்ளது. தெருவில் நடந்து சென்ற 12 வயது சிறுவனை ராட்வைலர், பாக்ஸர் ரக வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இப்போது பலரும் நாய்களை தங்கள் வீடுகளில் வாங்கி வளர்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், நாய்களை வாங்கும் போது இருக்கும் ஆர்வம் பலருக்கும் அதை வளர்க்கும் போது இருப்பதில்லை.

இதனால் வீடுகளில் நாய்கள் ஆக்ரோஷமாகவும் ஆபத்தானதாகவும் மாறுகிறது. சமீபத்தில் கூட ராட்வைலர் இன நாய்கள் 5 வயது சிறுமியைக் கடித்துக் குதறியது. இதற்கிடையே மீண்டும் அதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
12 வயது சிறுவன்: சென்னை புழல் லட்சுமிபுரம் டீச்சர் காலனி 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஜோசுவா டேனியல். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிளியோபஸ் ஜெரால்டு.. 12 வயதான கிளியோபஸ், அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராட்வைலர், பாக்ஸர் ஆகிய இரு நாய்களை வளர்த்து வருகிறார்கள். நேற்று சனிக்கிழமை கிளியோபஸ் ஜெரால்டு அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டின் கதவுகள் திறந்து கிடந்த நிலையில், இரு நாய்களும் வெளியே சுற்றித் திரிந்து கொண்டு இருந்துள்ளது.
கடித்துக் குதறிய நாய்கள்: சிறுவன் வெளியே வந்ததைப் பார்த்ததும் அந்த நாய்கள் திடீரென ஆவேசமாகக் குரைக்க ஆரம்பித்துள்ளன. இதைப் பார்த்து சிறுவன் அஞ்சிய நிலையில், நொடிப் பொழுதில் சிறுவன் மீது பாய்ந்த அந்த நாய்கள் அந்த சிறுவனைக் கடித்துக் குதறியுள்ளன. நாய்கள் சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்கியதால் சிறுவன் அலறி துடித்துள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த தந்தை இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
இரண்டு நாய்களையும் விரட்டிவிட்டு சிறுவனை மீட்டுள்ளார். இருப்பினும், அதற்குள் நாய் கடித்ததில் சிறுவனின் தலை, மார்பு, கழுத்து, கை பகுதியில் மிக மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிய தந்தை ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகார்: இந்தச் சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை புழல் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் ராட்வைலர் இன நாய்களுக்குக் கருத்தடை ஆப்ரேஷன் செய்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. அதேபோல நாய்களை வளர்க்கப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டையும் இந்த உரிமையாளர்கள் செய்துள்ளனரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தொடரும் பகீர் சம்பவங்கள்: சென்னையில் இதுபோன்ற நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து வருவது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை ராட்வைலர் இன நாய் கடித்துக் குதறியது. இதில் சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜி செய்யும் அளவுக்கு நிலைமை மோசமானது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நாய் வளர்க்கக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
இருப்பினும், நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்தே வந்தன. ஆதம்பாக்கம், சூளைமேடு, ஆலம்பாக்கம் என பல்வேறு இடங்களிலும் வரை நாய் கடித்த சம்பவங்கள் பதிவாகி வருகிறது. சமீபத்தில் கூட சென்னை முகப்போரில் இரண்டரை வயது பெண் குழந்தையைத் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் சிறுமி படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications