அங்கன்வாடி பணி நியமனத்தில் மிரட்டிய அதிமுகவினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்.. யார் இந்த அனு ஜார்ஜ்!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்ட அனு ஜார்ஜ் அரியலூர் ஆட்சியராக இருந்த போது அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவின் நிர்வாகிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்.
Recommended Video
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செயலாளராக நியமிக்கப்பட்டவர்களில் அனு ஜார்ஜும் ஒருவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தொழில் துறை ஆணையராக பதவி வகித்து வந்தார்.
மிகவும் நேர்மையாளரான இவர் அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது அப்போது ஆளும் கட்சியாக செயல்பட்ட அந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு துணிச்சலாக எதிர்த்தவர்.
அதிமுக ஆட்சி
ஆம். எதற்கும் அஞ்சாதவர். யார் இவர் என்பதை பார்ப்போம். தமிழகம் முழுவதும் கடந்த 2012 ஆம் ஆண்டு அதாவது அதிமுக ஆட்சியில் 4,373 அங்கன்வாடி ஒருங்கிணைப்பாளர்கள், 5,717 சமையலர்கள், 6,703 உதவி சமையலர்கள் ஆகியோரை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
கல்வித் தகுதி
ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பும், சமையலருக்கு 8ஆம் வகுப்பும் உதவி சமையலருக்கு 5 ஆம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமானது என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒருங்கிணைப்பாளருக்கு ரூ 2,500 முதல் ரூ 5000 வரையும் சமையலர்களுக்கு 1,300 முதல் 3000 வரையும் உதவி சமையலர்களுக்கு 950 முதல் 2000 ரூபாய் வரையும் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிப்பட்ட பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.
லட்சங்கள்
இந்த பணிகளுக்கு ஆளும் கட்சியினர் பல லட்சங்களை வாங்கிக் கொண்டு பணி நியமனம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் மதுரை ஆட்சியராக இருந்த அன்ஷுல் மிஸ்ரா, தூத்துக்குடி ஆஷிஷ் குமார், அரியலூர் அனு ஜார்ஜ் மற்றும் பெரம்பலூர் டேரஸ் அகமது ஆகியோர் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்படும் என கறாராக கூறிவிட்டனர்.
பணி நியமனம்
அதிலும் அனு ஜார்ஜ் பணி நியமன ஆணைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்கிவிட்டு அதை உறுதி செய்ய வேண்டும் என பிடிஓக்களுக்கும் தாசில்தார்களுக்கும் உத்தரவிட்டிருந்தார். இவரது செயலால் அரியலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆடி போய்விட்டனர்.
பணிநியமன கடிதம்
அதிமுக நிர்வாகிகள் பரிந்துரைத்தவர்களுக்கு இந்த 4 பேரும் பணிநியமன கடிதத்தை அளிக்காததால் இவர்கள் ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். பழிவாங்கப்பட்டனர். எனினும் தங்கள் நேர்மையிலிருந்து மாறாமல் இருந்தனர். அச்சமில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தனர் அனு ஜார்ஜ் உள்ளிட்டோர்.
மெரினா
இது மட்டுமல்லாமல் கருணாநிதி இறந்த போது மெரினாவில் அவரை நல்லடக்கம் செய்யலாம் என நீதிமன்ற உத்தரவு வந்த குறுகிய காலத்தில் அமுதா ஐஏஎஸ் மற்றும் சுபோத் குமார் ஐஏஎஸ் ஆகியோருடன் இணைந்து ஓடியாடி பணியாற்றினார். அன்றைய தினம் எந்த சொதப்பலும் இல்லாமல் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டதற்கு இவர்கள் மூவரும் ஒரு காரணம்.