ஆசிரியர் தேர்வு வாரிய நியமனம்.. உச்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: தமிழக அரசு அரசாணை
சென்னை: ஆசிரியர் நியமனத்திற்கான பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் 100 சதவீதம் நேரடி நியமன முறையிலும், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும் எஞ்சிய 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நியமிக்கப்படுகின்றனர்.
பண பலன்கள் வழங்க கோரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கு: பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜர்
வயது வரம்பு
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும், ஓய்வு பெறும் வயது 58 ஆகவும் இருந்தது. பின்னர் பணியாளர்களின் ஓய்வுக்கான வயது வரம்பு 60 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் பணி நியமத்திற்கான உச்ச வரம்பு 40 வயதாக குறைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல்முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
வயது உச்ச வரம்பு
இதனால் அதிர்ச்சியடைந்த, 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டதுடன், முதல்வர், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்திபள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டார்.
5 ஆண்டுகள் உயர்வு
அதன்படி ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக வும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வரம்பு 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவரை வெளியிடப்படும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு இது பொருந்தும்.
2023 வரை அரசாணை
மேலும், மனிதவள மேலாண்மைத் துறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட அரசாணையின்படி, நேரடி நியமனத்துக்கான உச்ச வயது வரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அரசாணை
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021 செப்டம்பர் 9ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் செப்டம்பர் 13ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு, அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு, தற்போதுள்ள 30 ஆண்டுகளில் இருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும், அதிகபட்ச வயது உச்ச வரம்பினை கொண்டுள்ள பதவிகளை பொறுத்தவரையில், தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய வயது வரம்பு தளர்வு இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை மட்டுமே சிறப்பு நிகழ்வாக ஒரு முறை நிர்ணயித்து ஆணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர் தகுதிதேர்விற்கு தயாராகி வருவோர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.