இனி சான்ஸே இல்லையா! நொறுங்கிய ஓபிஎஸ் அஸ்திரம்.. "அதை" பற்றி பேச மாட்டோம்.. நீதிபதிகள் பளீர் ஆர்டர்!
சென்னை: அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பில் இன்று நீதிபதிகள் முக்கியமான சில விஷயங்களை குறிப்பிட்டனர்.
ஜூலை 11ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு செல்லும். இந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கில் இன்று காலை இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில்.. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவிற்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. அதனால் இந்த பொதுக்குழு சட்ட பூர்வமானது இல்லை என்று கூறியது. இதை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதிதான் முந்தைய வழக்கில் பொதுக்குழுவை ரத்து செய்தார்.
ஓபிஎஸ் பயன்படுத்திய மிகப்பெரிய அஸ்திரமாக இது பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோரின் இரட்டை நீதிபதி அமர்வு ஏற்றுக்கொள்ளவில்லை.
போடுங்கண்ணே வெடிய.. ஆதரவாய் வந்த தீர்ப்பு! எடப்பாடி ஹாப்பி அண்ணாச்சி! குதூகலமான அதிமுக தொண்டர்கள்!
ஜூலை 11
இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாமல், 2 நீதிபதிகளும் இன்று வழங்கிய தீர்ப்பில், அடுத்த பொதுக்குழு ஜூலை 11 நடக்கும் என ஜூன் 23ல் பொதுக்குழுவில் அறிவித்ததே நோட்டீஸ் தான். இதை முறையான நோட்டீஸாகத்தான் கருத வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நடத்தப்படும் சிறப்பு கூட்டங்களுக்கு இன்னொரு நோட்டீஸ் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஒ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11 பொதுக்குழு கூட்டப்படும் அறிவிக்கப்பட்டால், தனக்கு தெரியாது என கூற முடியாது
எம்ஜிஆர் மறைவு
25 ஆண்டுகளுக்கும் முன் எம்.ஜி.ஆர். மறைவில் இதே நிலை ஏற்பட்டபோது பொது செயலாளர் ஜெயலலிதாவை அணுக முடியவில்லை என கூறி துணை பொதுச் செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு கூட்டிய பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அப்போது அந்த பொதுகுழுவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இங்கே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தெரிந்தே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது .
இணைந்து செயல்பட வேண்டும்
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு விதிகள் திருத்தம் 2017ல் செய்யப்பட்டது. 2021 டிசம்பர் பொதுக்குழுவில் ஒரே வாக்கு முறைப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு என திருத்தம் செய்யப்பட்டது. அதனால் தனிப்பட்ட முறையில் ஒருவர் மட்டும் செயல்பட முடியாது. அதாவது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் செயல்பட வேண்டும்.
திருநாவுக்கரசு
இருவரும் சேர்ந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று முந்தைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இருவருக்கும் மோதல் காரணமாக இணைந்து சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவார்கள் எனவும் எதிர்பார்க்கமுடியாது. ஒருவருக்கொருவர் இடையே ஒத்துழைப்பு இல்லாத நிலையில், பொதுக்குழுவே கூட்ட முடியாத நிலைதான் உள்ளது. திருநாவுக்கரசு வழக்கில் துணை பொதுச் செயலாளர் கூட்டிய கூட்டத்தால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய வழக்கில் போட்டி பொதுக்குழு கூட்டாததால் அந்த வழக்கின் உத்தரவு தற்போது பொருந்தாது.
பொதுக்குழுவுக்குதான் உச்ச பட்ச அதிகாரம்
இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இடையே பிரச்சினை நிலவுவதால், ஜூன் 23ல் அவைத்தலைவர் அழைப்பு விடுத்த ஜூலை 11 பொதுக்குழு சட்டவிரோதம் என கூற முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் உள்ள பொதுக்குழுவுக்குதான் உச்ச பட்ச அதிகாரம் உள்ளது. இருவரும் இணைந்து கூட்ட இயலாத நிலையில் ஒவ்வொரு முறைமுறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது. பொதுக்குழுவுக்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை.
இணை ஒருங்கிணைப்பாளர்
பதவி காலி என்பதால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுவிட்டு, தலைமை நிலைய செயலாளர் என்ற நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அப்படி ஒரு நிலையில் இருவரும் இணைந்து தான் பொதுக்குழு செயற்குழுவை கூட்ட வேண்டுமென கூற முடியாது. எனவே ஜூலை 11 பொதுக்குழு என்ற அறிவிப்பில் தடையில்லை.
பதவி காலி
2460 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து 2539 உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். ஜூலை 11 கூட்ட வேண்டுமென்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், போலியானது என்று சொல்ல முடியாது. பொதுக்குழு, செயற்குழு இருவரும் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவால் ஈடு செய்ய முடியாது பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. கட்சி முடக்கும் நிலையிலும் உள்ளது.
பொதுக்குழுதான் ஒப்புதல் அளிக்கும்
இருவரும் இணைந்து எடுக்கும் முடிவுகளையும் பொதுக்குழுதான் ஒப்புதல் அளிக்கும். ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருவரும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டுமென்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக இணை ஒருங்கிணைப்பாளர் கடிதம் எழுதி உள்ள நிலையில், அதே பதவியில் தொடர உத்தரவிட்டது தவறு.
அதை பற்றி பேச மாட்டோம்
இரு பதவிகள் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜூன் 23 பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை, பதவிகள் காலியாகிவிட்டது போன்ற விவகாரத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஒப்புதல் அளிக்காததால் இரு பதவிகள் காலியாகிவிட்டதா என பிரதான வழக்கில் முடிவு செய்ய முடியும். அதை பற்றி இங்கே பேச முடியாது. உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக சிவில் வழக்கு தொடர முடியாது என கூற முடியாது. அவை பிரதான வழக்கில்தான் முடிவு செய்ய முடியும்... அதனடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது., என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.