ஹாட்டிரிக் விக்கெட்.. ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலுக்கு இடையில் புகுந்த ஸ்டாலின்.. ஆஹா.. 3 எம்எல்ஏக்களா?
சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்கள் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்கள். கட்சி செல்லும் நிலையை பார்த்து.. கட்சியில் நமக்கு எதிர்காலம் இருக்குமா? கட்சிக்கு முதலில் எதிர்காலம் இருக்குமா என்று கேட்க தொடங்கிவிட்டனர்.
எப்போது, யாரின் கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும் என்று தெரியாத அளவிற்கு கட்சியில் வார வாரம் தலைமை மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் வழக்குகள், மேல்முறையீடுகள் காரணமாக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
இந்த நிலையில்தான் அப்செட்டில் உள்ள நிர்வாகிகள் வரிசையாக மாற்று கட்சிகளுக்கு தாவும் முடிவில் இறங்கி உள்ளனர். இவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு இரண்டு கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
ஒன்று பாஜக.. இன்னொரு ஆளும் திமுக. முக்கியமாக கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏக்களை தாங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு இரண்டு கட்சிகளும் தீவிரமாக முயன்று வருகின்றன.
ஓபிஎஸ், இபிஎஸ்க்கு கொஞ்சம் “ரிலாக்ஸ்” - அதிமுக தலைமையக கலவரம்.. உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
கொங்கு
இந்த நிலையில்தான் கொங்கு மண்டலத்தில் உள்ள 3 எம்எல்ஏக்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க போவதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றார். கோவையில் பல நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து 50 ஆயிரம் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடந்தது.
யார் ஐக்கியம்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் இந்த நிர்வாகிகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளனர். பாஜகவை சேர்ந்த மைதிலி வினோ, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உள்ளிட்டோர் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தினகரன் திமுகவில் இணைந்தார். 2011ல் சூலூர் எம்எல்ஏவாக தேமுதிக சார்பாக வென்றவர் தினகரன். இவருடன் தேமுதிக நகர செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் பலர் திமுகவில் இணைந்தனர்.
என்ன நடக்கும்
இந்த விழாவின் போதே அதிமுக எம்எல்ஏக்களை திமுக பக்கம் இழுக்கும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி 3 எம்எல்ஏக்கள் விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க போவதாக கூறப்படுகிறது. கோவையை சேர்ந்த 10 அதிமுக எம்எல்ஏக்களில் 3 பேர் முதல்வர் ஸ்டாலினை பார்த்து திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதிகாரபூர்வமாக கட்சி தாவினால் இவர்களின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும்.
கட்சி தாவல்
இதனால் அவர்கள் 3 பேரும் கட்சி தாவ மாட்டார்கள். மாறாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து.. அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதோடு கோவைக்கு அதிகாரபூர்வமற்ற திமுக எம்எல்ஏக்கள் போல இவர்கள் செயல்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு இவர்கள் ராஜினாமா செய்தால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். ஆனால் தமிழ்நாடு அரசு இடைத்தேர்தலுக்கு தயாராக இல்லை. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலோடு 3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை கொண்டு வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த நிலை?
அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் - ஓ பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் என்று கட்சி நிர்வாகிகள் பிரிந்து கிடக்கிறார்கள். இதில் இரண்டு பேரின் மீதும் சிலர் அப்செட்டில் உள்ளனர். இரண்டு பேரின் அணிக்கும் செல்ல விருப்பம் இன்றி சிலர் உள்ளனர். அவர்களைத்தான் மொத்தமாக தங்கள் பக்கம் இழுக்கும் திட்டத்தில் திமுக தரப்பு இறங்கி உள்ளதாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.