"விலாங்கு மீன்".. ஒரே கல்லில் "டபுள் மாங்கா".. டெல்லியை நெருக்கும் பிரபலம்.. "இவர்"தான் அடுத்த தலைவர்
சென்னை: தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள், தலைவர் பதவியை பெறுவதற்கான முயற்சியில் இறங்கி உள்ள நிலையில், முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. என்ன விஷயம்?
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த பிப்ரவரி, 2019-ல் நியமனம் செய்யப்பட்டார். அந்த கட்சியின் விதிமுறைகளின்படி 3 வருடங்கள் மட்டுமே, தலைவர் பதவியில் நீடிக்க முடியும்.

அழகிரி: அதன்படி அழகிரியின் பதவிக்காலம் கடந்த வருடம் பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது... இதையடுத்து, அந்த பதவியை பிடிக்க பலரும், கடந்த ஒருவருட காலமாகவே, முயற்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக, மூத்த தலைவர்கள் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, விஜயதாரணி, செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ரூபி மனோகரன், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர், இந்த தலைவர் பதவிக்கு, மும்முரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
ஒரே குழப்பம்: அனைவருமே சீனியர்கள் என்பதால், யாரை தேர்ந்தெடுப்பது என்று மேலிடமே குழம்பி போயிருப்பதாக தெரிகிறது. இந்த ஒவ்வொருவருக்குமே, டெல்லியில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்கள் சிபாரிசு செய்கிறார்களாம்.. அவர்களின் செல்வாக்குதான், தமிழக தலைவரை தேர்வு செய்வதில் அடித்தளமாக இருக்கும் என்கிறார்கள்..
ஆனால், தமிழக தலைவரை மாற்றியாக வேண்டும் என்பதில், ராகுல் உறுதியாக இருக்கிறாராம்.. எம்பிக்கள் செல்லக்குமார், ஜோதிமணி, கர்நாடக தேர்தல் வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவரான சசிகாந்த் செந்தில் ஆகியோரையே ராகுல் காந்தி பரிசீலிப்பதாகவும் சொன்னார்கள்.. இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
எனினும், கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாகவே, கார்த்தி சிதம்பரம் இதற்கான காய்நகர்த்தல்களை அதிகமாக எடுக்க துவங்கிவிட்டதாக தெரிகிறது.. காரணம், கடந்த பிறந்தநாளின்போது, தலைமைச் செயலகத்தின் போட்டோவுடன் "தமிழகத்தின் எழுச்சி நாள்" என்று போஸ்டரில் கொட்டை எழுத்துக்களில் பளிச்சென அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.. கார்த்திக்கை விட சீனியர்கள் கட்சிக்குள் இருப்பதால், இதை பார்த்து கடுப்பாகிவிட்டார்களாம்..
தலைவர் பதவி: ஒருவேளை "மேலிட சிபாரிசு" எழக்கூடுமோ? தங்களின் அடிமடியிலேயே வாரிசுகள் "கை" வைத்து விடுவார்களோ? என்ற கலக்கம் இந்த சீனியர்களை சூழ்ந்துள்ளதாகவும் சலசலக்கப்பட்டது. அதற்கேற்றபடி, காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம், மூத்த தலைவர் ப.சிதம்பரம் நடத்தி வந்த ஆலோசனைகளின்போதெல்லாம், "இளைஞர்கள் யாருக்காவது, இந்த தலைவர் பதவியை ஒதுக்கலாம்" என்று பொடிவைத்து பேசினாராம்..
இப்போதுவரை, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தனது மகனுக்கு வாங்கித்தந்திட வேண்டும் என முடிவு செய்து பகீரத முயற்சியை கடந்த 2 வாரங்களாகவே எடுத்து வருகிறாராம். இதற்காக கட்சியின் முக்கிய தலைவர்களின் உதவியை நாடியிருக்கிறாராம்.. குறிப்பாக கார்கேவிடம் இது குறித்து மீண்டும் விவாதித்துள்ளார் சிதம்பரம்.
ஆனால் அவரோ, "ராகுலை மீறி என்ன நடந்து விடப்போகிறது? அவரிடம் பேசுங்கள். இல்லையெனில் சோனியா மேடத்திடம் பேசுங்கள்" என்று சொல்லி, உதவி செய்யும் ஆட்டத்தில் இருந்து விலகி கொண்டிருக்கிறார் கார்கே. ஆனாலும் தன்னுடைய முயற்சியை கை விடாத விக்கிரமாதித்தனை போல அடுத்தக்கட்ட காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டார் ப.சிதம்பரம்.
ராகுல் காந்தி: தமிழகத்தின் அரசியல் சூழல் எப்படி நகர்கிறது? தேர்தல் களம் எப்படி இருக்கப்போகிறது? இதனை தமிழக காங்கிரஸ் எப்படி அணுக வேண்டும்? காங்கிரஸ் தலைவராக இளைஞரை நியமிக்க வேண்டும். அப்படி நியமிப்பதால் என்ன பலன்? என்பது உள்ளிட்ட பல விசயங்களை சோனியாவுக்கும் ராகுலுக்கும் தெரிவித்து, "தனது மகனுக்கு வாய்ப்புக் கொடுங்கள்" என்று கேட்டிருக்கிறாராம் ப.சிதம்பரம்.
இதற்கு நெகட்டிவ் விடை எதுவும் வராத நிலையில், "காங்கிரஸ் தலைவர் ஆகிறார் கார்த்தி சிதம்பரம்" என்று ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் பரவி வருகிறது... இதனையறிந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் செல்லக்குமார் மற்றும் ஜோதிமணி ஆகியோர் கட்சி மேலிடத்தில் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுஒருபக்கம் என்றால், வரப்போகும் எம்பி தேர்தலில், கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் ஒதுக்கப்பட வேண்டும் என்கிற உறுதி மொழியை மேலிடத்திடம் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறாராம் சிதம்பரம்.. ஆனால், இந்த முறை கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் இல்லை, தமிழகத்தில் அவரை கட்சி பணிக்கும் தேர்தல் பணிக்கும் அனுப்பலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதைக்கேட்டு, அப்-செட்டாகியிருக்கிறாராம் ப.சிதம்பரம்.
செயல்தலைவர்: அதுமட்டுமல்ல, ப.சிதம்பரம் போன்ற சீனியர்கள், கட்சியில் இளைஞர்களுக்கு பதவி கொடுத்து ஊக்கப்படுத்தினால் தேர்தல் நேரத்தில் ஒரு இலக்கை அவர்களுக்கு கொடுத்து பணியாற்ற சொல்லலாம். அதனால் செயல்தலைவர் பதவி இருப்பது நல்லது தான் என சொல்லியிருக்கிறாராம்.. எனவே, தலைவர் விஷயத்தில், ஒரு முடிவு எடுக்கப்பட்ட பிறகு, செயல்தலைவர் விசயத்திலும் முடிவு தெரியும் என்று காங்கிரஸ் தரப்பினர், நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆக, மகனுக்கு ஒருபக்கம் எம்பி சீட், இன்னொரு பக்கம் தலைவர் பதவி என மனம்தளராத முயற்சியை முன்னெடுத்துவருகிறார் ப.சிதம்பரம்.. இதற்கு மேலிடம் என்ன முடிவு எடுக்க போகிறது என்று தெரியவில்லை.. அதுவும், கார்த்தி மீதான அதிருப்தி, ராகுல் காந்திக்கு நீங்கிவிட்டதா? அதுவும் தெரியவில்லை..
சஸ்பென்ஸ்: ஏற்கனவே மேலிட பாஜகவால் டார்கெட் செய்யப்பட்டுள்ள நிலையில், எம்பி தேர்தலும் நெருங்கி வரும் சூழலில், ஒருவேளை தலைவர் பதவி கார்த்திக்கு வழங்கப்பட்டால், இதனை பாஜக எப்படி எதிர்கொள்ளும் என்பதும் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications