"ரிவர்ஸ் கியர்".. திமுகவுடன் சேருதா "அந்த" கட்சி? கடலூரில் வாரிசு மகனுக்கு சீட்? அப்ப பழைய கூட்டணி?
சென்னை: தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் எழுந்துவரும்நிலையில், சில தகவல்கள் அதுகுறித்து வெளியாகி வருகிறது.
கடந்த மாதம் 24ம்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார் பிரேமலதா.. இந்த கூட்டத்தில் சில முக்கிய விஷயங்களை, மாவட்ட செயலாளர்களிடம் பிரேமலதா விவாதித்துள்ளார்.
குறிப்பாக, பாஜக-அதிமுக கூட்டணியில் நமக்கு இடமில்லை என்றால், அடுத்து என்ன முடிவு எடுக்கலாம்? என்றெல்லாம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு பிறகு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும்போதே செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார் பிரேமலதா.

கோபாலபுரம்: அப்போது, செய்தியாளர்கள் "திமுகவுடன் பேசினீர்களாமே? கோபாலபுரத்துக்கு போன் போட்டுநலம் விசாரித்தார்களாமே?" என்றெல்லாம் கேட்டார்கள். அதற்கு பிரேமலதா, "திமுகவுடன் நாங்கள் ஏன் பேச வேண்டும்? அதற்கான அவசியம் எங்களுக்கு துளியும் இல்லை" என்று மாவட்ட செயலாளர்கள் முன்னிலையிலேயே காட்டமாக விளக்கமாக கூறியிருந்தார்.
இதன்மூலம் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அப்போதே முடிவாகிவிட்டது என்றார்கள். அப்படியானால், பாஜகவுடன் கூட்டணியை தொடர்ந்து, சீட் வாங்கும் முயற்சியில் தேமுதிக இறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், வெளியாகிவரும் தகவல்கள் இதற்கு முரணாக உள்ளது.. திமுகவுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில், தேமுதிக தீவிரமாக ஈடுபட்டதாக சொல்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி: அந்தவகையில், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் என 2 தொகுதிகள் தேமுதிக சார்பில் கேட்கப்பட்டதாம்.. ஆனால், கூட்டணியில் இடமில்லை என்றும், பழைய கூட்டணியே தொடரும் என்றும் திமுக தலைமை தேமுதிகவிடம் சொல்லிவிட்டதாம். பிறகு, விஜயபிரபாகரனை போட்டியிட வைக்க, ஒரு தொகுதியாவது கிடைக்குமா என்று மீண்டும் கேட்டதாம்.. அதற்கும் திமுக மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும், இதைக்கேள்விப்பட்டு, பிரேமலதா கடும் அப்செட்டாகி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்ல, திமுக மீதான விமர்சனத்தை பிரேமலதாவும், விஜயபிரபாகரனும் இனிமேல் தீவிரமாக கையில் எடுக்க போகிறார்களாம்.. இது தொடர்பான அதிருப்திகள் அறிக்கைகள் மூலம் அடிக்கடி வெளியாகலாம் என்கிறார்கள்.

திமுக & அதிமுக: அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும், தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோதே, திமுக கூட்டணியில் வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால், டெல்லியில் நடந்த பாஜக - அதிமுக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்துக்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதற்கு காரணமும் வெளிப்படையாக தெரியவில்லை. தமாகா, புதிய பாரதம் போன்ற கட்சிகளைவிட, தேமுதிக அதிகமாகவே வாக்கு சதவீதத்தை வைத்திருக்கிறது என்றபோதும், புறக்கணித்துவிட்டார்களே என்ற வேதனை பிரேமலதாவுக்கு இருப்பதாக சொன்னார்கள்.. அந்தவகையில் யாருடன் தேமுதிக கூட்டணி வைக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications