யாரை பார்த்து வாரிசுன்னு சொல்றீங்க.. சட்டசபையில் அதிமுக - திமுக காரசார மோதல்!
வாரிசு அரசியல் குறித்து சட்டப்பேரவையில் திமுக-அதிமுக விவாதத்தில் ஈடுபட்டனர்
சென்னை: யாரை பார்த்து வாரிசு அரசியல்ன்னு சொல்றீங்க என்ற ரீதியில் அதிமுக, திமுக இரு கட்சிகளுமே இன்று சட்டசபையில் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
சட்டப்பேரவை தற்போது நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தில் சோளிங்கர் எம்எல்ஏ ரவி, மற்ற கட்சிகளை போல் தந்தை, மகன், பேரன் என வாரிசு அரசியலில் அதிமுக இல்லை என்றார்.
மேலும், சிறுபான்மையினரின் பாதுகாவலர் போல் அதிமுக காட்டிக்கொள்ளவில்லை, என்றும், ஏனெனில் மாநிலங்களவைத் தேர்தலில் முஸ்லிம் ஒருவருக்கும், அருந்ததியர் ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கி அதை செயல்படுத்தி உள்ளது அதிமுகதான் என்றும் சொன்னார்.
திமுக கொறடா
எம்எல்ஏ ரவி இப்படி சொன்னபோது அவையில் ஸ்டாலின் இல்லை. ஆனால் இந்த கருத்துக்கு பேரவையே பரபரப்பானது. உடனே திமுக கொறடா சக்கரபாணி எழுந்தார். வாரிசு அரசியல் பற்றி அதிமுக உறுப்பினர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அதற்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனோ நீக்க முடியாது என்று பதிலுரைத்தார்.
வாரிசுகள் இல்லையா?
பின்னர் சக்கரபாணி, அவையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவது மரபில்லை. வாரிசு அரசியல் என்றால், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன்.. இவர்கள் எல்லாம் வாரிசுகள் இல்லையா?
அவைக்குறிப்பு
ஸ்டாலின் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து கட்சித் தலைவராகி உள்ளார். எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து, இளைஞர் அணி செயலாளர் ஆனவர். தான்தோன்றித்தனமாக பதவிக்கு வரவில்லை" என்று சொல்லி அதிமுக எம்எல்ஏ பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று மறுபடியும் கோரிக்கை விடுத்தார்.
சபாநாயகர்
இதையடுத்து அமைச்சர் தங்கமணி, ''அதிமுக உறுப்பினர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லையே.. திமுக உறுப்பினர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்?" என்றார். இறுதியாக பேசிய சபாநாயகர், ''அதிமுக உறுப்பினர் யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, நீங்களாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்'' என்று சொல்லி சலசலப்புக்கும் வார்த்தை மோதலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.