Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வலுவாக பாயிண்டை பிடித்த வைரமுத்து தரப்பு வக்கீல் “அது எப்படி நோட்டீஸ் ஆகும்?”- ஈபிஎஸ்ஸுக்கு சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் எடுத்து வைத்த வாதம், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பலம் ஏற்றியுள்ளது. பொதுக்குழு வழக்கில் நீதிபதி ஈபிஎஸ் தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளதால் வழக்கின் திசை ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவு பற்றி ஊடகங்கள் வெளியிடும் செய்தியை நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதுபோல, ஜூன் 23 பொதுக்குழுவில் நேரலை செய்ததை ஜூலை 11 பொதுக்குழுவிற்கான நோட்டீசாக கருத முடியாது என்று வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ், வைரமுத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதா என்பது குறித்தும், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன் என்பது குறித்தும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கு

எடப்பாடி பழனிசாமி தரப்பால் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், அதிமுக கட்சி விதிகளின்படியே பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டதால் கூட்டப்பட்ட பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் அவகாசம் தேவையில்லை எனத் தெரிவித்தார்.

சட்டப்படியே கூட்டப்பட்டது

சட்டப்படியே கூட்டப்பட்டது

எனினும், பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டப்படும் என்று ஜூன் 23-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு அப்போதே நேரலையாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் செய்தியாக வெளியானது. கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தான் நோட்டீஸ். எனவே அதை நோட்டீசாக கருத வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ், ஜூலை 1-ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுக்குழு சட்டப்படிதான் கூட்டப்பட்டது என விளக்கம் அளித்தார்.

 எப்படி காலாவதி ஆகும்?

எப்படி காலாவதி ஆகும்?

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கும் முன்னரே எப்படி பதவிகள் காலாவதி ஆனது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், 2021 டிசம்பர் 1 செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை. தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன என்றும், இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பர் என தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்து உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 நோட்டீஸ் அவசியம்

நோட்டீஸ் அவசியம்

எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றால், இரு பதவிகளுக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும் கேள்விக்கே இடமில்லை என்றும், பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகி விடும் என ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்தார். மேலும், பொதுக்குழு குறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை மூலமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும், அந்த நோட்டீஸைத்தான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

செய்தி என்பது அதிகாரப்பூர்வமானது கிடையாது

செய்தி என்பது அதிகாரப்பூர்வமானது கிடையாது

வைரமுத்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம், "நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு குறித்து ஊடகங்கள் வெளியிடும் செய்தியை நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படித்தான் ஜூன் 23 பொதுக்குழுவில் நடந்தது பற்றி ஊடகங்கள் நேரலை செய்ததை ஜூலை 11 பொதுக்குழுவிற்கான நோட்டீசாக கருத முடியாது" எனத் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Recommended Video

    அதிமுக பொதுக்குழு தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்
    ஓபிஎஸ்ஸுக்கு சாதகம்?

    ஓபிஎஸ்ஸுக்கு சாதகம்?

    பொதுக்குழு சட்டப்பூர்வமாக கூட்டப்படவில்லை என்பதால், அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ் தரப்பு தொடர்ச்சியாக முன்வைக்கும் வாதம். பொதுக்குழு கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர் இன்றி கூட்டமுடியாது என்பதும், 15 நாட்களுக்கு முன்னதாகவே நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும் என்ற விதிகளையும் முன்வைக்கிறது ஓபிஎஸ் தரப்பு. 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டால் பொதுக்குழுவைக் கூட்டலாம் என ஈபிஎஸ் தரப்பு வாதம் வைத்தாலும், 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கும் விதியால் எடப்பாடி தரப்புக்கு சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், ஓபிஎஸ், வைரமுத்து தரப்பு முன்வைத்த பாயிண்டுகள் வலுவாக இருப்பதால் ஈபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+