தமிழ்த்தாயின் தலைமகன் அண்ணாவின் பிறந்தநாள் - முதல்வர், துணை முதல்வர் அண்ணாசிலைக்கு மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி மரியாதை
சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அடுக்குமொழியில் பேசும் வித்தகர், அரசியலில் வெற்றி பெறுவதற்கும், ஆட்சியைப் பிடிப்பதற்கும் தனது விடாபிடியான கொள்கைகளாலும், அடுக்கு மொழி பேச்சாலும் சாதிக்க முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய தலைவர் அறிஞர் அண்ணா. அவரது 112 வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று
கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணாவின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்சமுதாயத்தை செம்மைப்படுத்த அயராது பாடுபட்ட இணையற்ற சமூக சீர்திருத்தச் செம்மல்; தமிழ்த்தாயின் தலைமகன்; சொல்வன்மையாலும் எழுத்துத் திறத்தாலும் இளைய தலைமுறையை தன்வசப்படுத்திய செயலாற்றலின் திருவடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல்துறை வித்தகர், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பிறந்த இத்திருநாளில், பேரறிஞர் அவர்களின் நினைவுகளையும், பெருமைகளையும் நினைந்து போற்றி, அவரது லட்சியமான சாதி பேதமற்ற சமநிலை சமுதாயத்தை உருவாக்கிட ஒற்றுமையோடு உழைப்போம் என உறுதி கொள்வோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"சீட் நம்பர் 228".. திமுக பக்கம்தான்.. ஆனா பேச்சு பாஜக பக்கம் இருக்குமோ.. அவையில் குக.செல்வம் எப்படி