ஐஏஎஸ் அதிகாரி மாற்றம்.. தொழில் துறை செயலராக அருண் ராய்.. ‘ட்ரில்லியன் டாலர் எகானமி’ கனவை நோக்கி!
சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண் ராய் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவோடு தொழில் துறை முதலீடுகளை ஈர்க்க பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அருண் ராய் இதன் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மத்திய அரசின் பணிக்கு சென்ற நிலையில், அருண் ராய் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு அரசின் புதிய தொழில்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1989 ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருஷ்ணன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவர் வகித்த தொழில்துறை செயலர் பதவி காலியாக இருந்த நிலையில் அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
அருண் ராய் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக இருந்து வந்த நிலையில், அவர் தொழில் துறை, முதலீடு, வணிகத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். நேற்று இரவு தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், இன்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு அண்மைக் காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு - ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவாக இருந்து வருகிறது. இதற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இதற்கு தொழில்துறை, சிறப்பாக பணியாற்ற வேண்டும். தொழில் துறை அமைச்சராக டிஆர்பி ராஜா சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நிலையில் இப்போது துறை செயலரும் மாற்றப்பட்டுள்ளார்.
அருண் ராய் ஐ.ஏ.எஸ், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018-ன் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications