ஸ்டெர்லைட்.. அனைத்து பரிந்துரைகளையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி விட்டார்..- அருணா ஜெகதீசன் வரவேற்பு
சென்னை: ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தான் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில் பரிந்துரைந்த அனைத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார் என்று வரவேற்பு தெரிவித்துள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின்
காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணாஜெகதீசன் அவர்கள் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 14.05.2021 அன்று தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் இந்த போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் அவர்களின் கருத்தும், காவல்துறைத் தலைவரின் அறிக்கையும் பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருத்துரைகளின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்கள்.

வழக்கு வாபஸ்
1. இந்த சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

போராட்ட வழக்குகள்
2. 22.05.2018 அன்று நடந்த சம்பவத்திற்கு முன்னர் இந்த போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட்ட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

ரூ.1 லட்சம்
3. காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும்.

தடையில்லா சான்று
4. ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இப்போராட்டத்தின்போது தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர்களின்
உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

வரவேற்பு
அரசின் நடவடிக்கை குறித்து அருணா ஜெகதீசன் ஊடகங்களிடம் பேசுகையில் கூறியதாவது: அரசு எனது அறிக்கையை ஏற்று வெளியிட்ட அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி. 3 பரிந்துரைகளை நான் செய்திருந்தேன். வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும், மேல் படிப்பு, வேலை வாய்ப்புக்கு இடையூறு ஏற்படாத நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தேன். அரசு ஏறத்தாழ எனது பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

ரஜினியிடம் விசாரணை
இனிமேல் காவல்துறையினரிடம் நடத்த வேண்டிய விசாரணைதான் மிச்சமுள்ளது. விரைவில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுப்பேன். ஏனெனில் காவல்துறையில் 250 பேரிடம் விசாரணை நடத்த தேவையுள்ளது. ரஜினிகாந்த்திடம் விளக்கம் கேட்க வேண்டியுள்ளது. பெருந்தொற்று காலம் என்பதால், இப்போது ரஜினிகாந்த்திடம் விசாரிக்க முடியவில்லை. இவ்வாறு அருணா ஜெகதீசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications