நயினார் பேசும்போது அமைதியா கேட்டுட்டு.. அடுத்தநாள் வருத்தமா? அண்ணாமலையை விமர்சித்த அதிமுக எம்எல்ஏ
சென்னை : அதிமுக எம்எல்ஏக்கள் குறித்த பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், நயினார் பேசும் போது அருகில் இருந்து கேட்டுவிட்டு அடுத்தநாள் வருத்தம் தெரிவிப்பது ஏற்கத்தக்கதல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக எம்எல்ஏ அருண்மொழித் தேவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் பேசினார்.
அப்போது எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜக தொடர்ந்து தமிழகத்திற்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருவதாகவும் அதிமுகவில் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேசக்கூடிய ஒருவர் கூட இல்லை என கூறினார்.
நயினார் பேச்சுக்கு இடையே.. பரபர உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை.. பாஜகவிற்கு ஜெர்க் கொடுக்குமா அதிமுக ?
நயினார் நாகேந்திரன் சர்ச்சை
அதிமுகவில் ஆண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என என நயினார் நாகேந்திரன் பேசியது கட்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக தொண்டர்கள் நயினார் நாகேந்திரன் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். #நைனார்_மன்னிப்புகேள் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. மேலும் பாஜக அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டுமெனவும் தொண்டர்கள் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜக அண்ணாமலை விளக்கம்
இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சு குறித்து அவரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலையும் விளக்கம் அளித்துள்ளனர். நயினாரின் பேச்சு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசிவிட்ட தாகவும் நயினார் நாகேந்திரன் பேசியபோது ஒரு வார்த்தை தவறாக வந்துவிட்டதாகவும் இதை பெரிது படுத்த வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் ஓபிஎஸ்சிடம் பேச முடியவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து பேசியுள்ளதாகவும், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியதாக அண்ணாமலை தெரிவித்தார்.
அருண்மொழித்தேவன் எம்எல்ஏ
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்த நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் அதிமுக மக்கள் பிரச்சினைகளுக்காக தினந்தோறும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதோடு களம் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது எனவும், சட்டப்பேரவையிலும் உடனுக்குடன் வாதத்தில் ஈடுபட்டு, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர் எனவும் கூறினார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த நிலையில் சென்னையில் நிகழ்ந்த பாஜக கூட்டத்தில், அதன் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, அதிமுகவை விமர்சித்தும், ஆண்மையுள்ளவர்களா என்ற தொனியிலும் பேசியுள்ளார் என கூறிய அருண்மொழி வர்மன், இதை அங்கிருந்த அக்கட்சியின் தலைவர் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் ரசித்துக் கொண்டிருந்தனர் எனவும், அவரது பேச்சை அப்போதே கண்டிக்கத் தவறிய பாஜக தலைவர் அண்ணாமலை, எங்கள் கட்சித் தலைமை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார் எனவும், அது முடியவில்லை அதனால், அவர் அப்படி பேசவில்லை அவர் பேச முற்பட்டது வேறு என்ற நியாயப்படுத்தும் வகையில் பேசுவது ஏற்கக் கூடியது அல்ல எனவும், நயினார் நாகேந்திரன் அதிமுகவை விமர்சித்து பேசியதற்கு பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் அருண்மொழித்தேவன் கூறியுள்ளார்.