ஆட்டோ தொழிலை அபகரித்த கார்ப்பரேட் கால் டாக்சிகள்.. விழித்துக் கொள்வார்களா ஓட்டுநர்கள்?
சென்னை: சென்னை உள்பட பெருநகரங்களில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி தொழிலை மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிவிட்டன.
சிறுநகரங்களை நோக்கி தங்களது கரங்களை விரிக்க ஆரம்பித்துள்ளன இந்த நிறுவனங்கள். ஆனால் விழித்துக் கொள்ளாமல் இருக்கும் ஓட்டுநர்கள் நாளை அவர்கள் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பதை கார்ப்பரேட் நிறுவனங்களில் கைகளில் போய் விடப்போகிறார்கள்.
2010ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து சேப்பாக்கம் போக ரயிலில் 5 ரூபாய் தான். ஆனால் ஆட்டோவில் அவசரத்திற்கு செல்ல முயன்றால் மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்க முடியாது, என்று ரூ.150 கேட்டார்கள்.
10 வருடங்கள் தாண்டியும் இப்படித்தான் மீட்டர் போடாமல் சரியான தொகை மற்றும் சிஸ்டம் முறைகளை ஆட்டோ ஒட்டுநர்கள் பின்பற்ற மறுப்பதால் அந்த தொழில் இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
வாட்ஸ் ஆப்பில் மூழ்கிப் போன தாய்.. பாலுக்கு அழுத குழந்தையின் வாயைப் பொத்தி.. பரிதாப சம்பவம்!
மீட்டர் இல்லாமை
சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வாடகை ஆட்டோவில் செல்வதை காட்டிலும், கால்டாக்ஸிகளில் செல்லும் கட்டணம் குறைவாக மக்களுக்கு தெரிகிறது. அதேநேரம் ஒலா, பாஸ்ட்ராக், உபேர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் செயல்படும் ஆட்டோக்களின் கட்டணம் மிகக்குறைவு. இதனால் சாதாரண பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் வாகனங்களையே நாடுகிறார்கள்.
கட்டுபடியாகாத ரேட்
அதேநேரம் குறைந்த பட்ச தூரம், ஸ்மார்ட்போன் இல்லாத சாதாரண ஏழை மக்கள் இவர்களே தற்போது சாமனிய ஆட்டோ ஓட்டுநர்களின் வாடிக்கையாளர்களாக திகழ்கிறார்கள். ஆனால் தமிழக அரசு நிர்ணயித்த கட்டணம் இவர்களுக்கு கட்டுபடியாக வில்லை என்று கூறி இதுவரை மீட்டர் போடாமல் ஒரு ரேட் பிக்ஸ் செய்து ஒட்டுகிறார்கள்.
ஆட்டோ கட்டணம்
இதில் பல இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து செயல்பட்டாலும், சிலர் அதிக கட்டணம் வசூலிப்பதால் ஆட்டோவில் சென்றால் அதிக கட்டணம் என்ற அச்சம் மக்களிடையே வளர்ந்து வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள்
இதற்கு முக்கிய காரணம், இவ்வளவு தான் பணம் என சொல்லி, சொன்ன நேரத்திற்கு வந்திடுவோம். மொபைலில் டச் பண்ணாலே வீட்டு வந்துடுவோம் என்று மொபைல் அப்பிளிகேசனுடன் வலம் வரும் கார்ப்பரேட் கால் டாக்ஸி நிறுவனங்கள் தான். இவைகள் பெரு நகரங்களை தாண்டி, சிறுநகரங்களையும் நோக்கி சிறகுகளை விரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் .
சிஸ்டம் தேவை
எனவே ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி தொழிலில் இருப்பவர்கள் சிஸ்டமை உருவாக்கி, சரியான கட்டணத்தை உருவாக்கி, மக்களிடம் சேவையை கொண்டு செல்ல அரசின் உதவியை நாட வேண்டும். அல்லது இணைந்து சங்கமாக செயல்பட்டு சரியான கட்டணத்தில் சேவையை மக்களுக்கு அளிக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்டோ உங்களுக்கு சொந்தமாக இருந்தாலும் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வர வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் இடத்துக்கு கால் டாக்ஸி நிறுவனங்கள் வந்துவிடும் அபாயம் உள்ளது.