சென்னையில் விழிப்புணர்வு மாரத்தான்.. காலநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்.. அன்புமணி
சென்னை: காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசண்ட் நகரில் நடந்த மாரத்தானில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காலநிலை மாற்றத்துக்கு எதிராக தமிழக நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியா மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகமும் தற்போது எதிர்கொண்டிருக்கும் ஒரு முக்கிய ஆபத்து கால நிலை மாற்றம் தான். காலநிலை மாற்றத்துக்கு எதிராக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும், இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் அக்டோபர் 9-ஆம் தேதி காலை சென்னை பெசண்ட் நகரில் பசுமை தாயகம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணி வரை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெறும்'' கூறியிருந்தார்.

அதன்படி, இன்று காலை 6 மணியளவில் சென்னை பெசண்ட் நகரில் பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் புயல் ஏற்பட்டது. உலகிலேயே அதிக பாதிப்பை இந்த புயல் ஏற்படுத்தியது. இந்த புயலால் அமெரிக்காவில் 8 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. 5 மணி நேரத்தில் அடித்து சென்றது.. இது தொடக்கம் தான்.. இதேபோல பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஒரு புயல் வந்தது. நம் நாட்டிலும் தானே உள்பட பல புயல்கள் வந்தன. சமீபத்தில் கூட பெங்களூர் மற்றும் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்த்திருப்போம்.
பெரும் பணக்காரர்கள் வீடுகளில் கூட தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் தான் நாங்கள் அடிக்கடி சொல்லி வருகிறோம். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். காலநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூட பல முறை கூறியிருக்கிறேன்.. உடனடியாக காலநிலை அவசரநிலையை பிரகடனபடுத்த வேண்டும். நமது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருங்காலத்தில் கார்பன் டை ஆக்ஸைடை எப்படி குறைப்பது என்று ஆலோசிக்க வேண்டும். ஏனென்றால் வரும் காலங்களில் கடுமையான புயல் வரப்போகிறது... கடுமையான வறட்சி வரப்போகிறது.. கடல் மட்டம் உயரும்.. இன்னும் சில ஆண்டுகளில் பெசண்ட் நகர் கடற்கரை இல்லாமல் போகலாம்... நான் கூறவில்லை.. நிபுணர்கள் சொல்கிறார்கள்... ஐநா சொல்கிறது... எனவே தான் இதைப்பற்றி நாங்கள் அடிக்கடி பேசி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications