பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தேடுதல் குழு! ஆளுநருக்கு அதிகாரமில்லை! பாலகுருசாமி பளிச் விளக்கம்!
சென்னை: பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களை அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என கல்வியாளரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
பாலகுருசாமியா ஆளுநருக்கு எதிராக இப்படி சொல்லியிருப்பது என பலருக்கும் ஆச்சரியம் எழலாம். ஆனால் அது தான் உண்மை. துணைவேந்தர் தேடல் குழு விவகாரம் தொடர்பாக பாலகுருசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல் குழுக்களை தமிழக ஆளுநர் தன்னிச்சையாக சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே முட்டுக்கட்டை உருவாகியிருப்பது துரதிர்ஷ்டமானது.''
''துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) பிரதிநிதியை இணைக்க வேண்டும் என்ற நோக்கம் வரவேற்கத்தக்கது தான் என்றாலும் ஆளுநர் அதை தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் வழிகாட்டுதல் படியே தேடல் குழுக்களை அமைக்க வேண்டும். மேலும், அதை அரசிதழ் மூலம் அறிவிக்க வேண்டும்.''
''பல்கலைக்கழகங்களின் விதிகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களை ஆளுநர் மாளிகை மதிக்க வேண்டும். தேடல் குழு அமைப்பது தொடர்பான மரபுகளையும் கடைபிடிக்கப்பட வேண்டும். மேலும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தனது சுயவிருப்பத்தின்படி துணைவேந்தருக்கான தேடல் குழுவை அமைப்பதற்கும் அதை ஊடகங்களுக்கு வெளியிடவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ''
''மாநில அரசு அதற்கான அரசாணையை வெளியிட்ட பின்னரே தேடல் குழு முறைப்படி செயல்படத் தொடங்கும். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு ஏற்கெனவே ஆட்சேபித்துவிட்டது. இந்நிலையில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான இந்த முரண்பாடு புதிய துணைவேந்தர் நியமனத்தை மேலும் தாமதமாக்கும். இது பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை மிகவும் பாதிக்கும்.''
''பல்கலைக்கழக துணைவேந்தர்களை கண்டறியும் தேடல் குழுக்களில் தனது பிரதிநிதியை இடம்பெறச் செய்ய வேண்டுமென யுஜிசியின் புதிய விதிமுறைகளில் நிபந்தனை இருப்பது உண்மை தான். இது அந்தந்த மாநிலத்தில் உள்ள பாரபட்சமான அல்லது அரசியல் செல்வாக்கை தவிர்க்கும் என்பதால் வரவேற்கத்தக்கது.''
''ஆனால், இதை ஆளுநரோ, அரசோ தன்னிச்சையாகச் செய்ய இயலாது. துணைவேந்தர் தேடல் குழுக்களில் யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்யும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களின் விதிகளிலும் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்கான பணிகளை முன்னெடுக்க ஆளுநரும், யுஜிசியும் மாநில அரசைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.''
''உயர்கல்வி தொடர்பான பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல்கள் நீடித்து வருவதை சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். துணை வேந்தர்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இருதரப்பினரும் முரண்பட்ட உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கை, யுஜிசி அறிவுறுத்தல்களை அமல்படுத்த வேண்டுமென ஆளுநர் தரப்பு கூறும்போது, யுஜிசி, ஏஐசிடிஇ உத்தரவை அமல்படுத்த தேவையில்லை என்று அரசு தரப்பு கூறுவது விச்த்திரமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.''
'' பல்கலை. துணைவேந்தர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்ப்பவர்களாகிவிட்டது அவலமானது. துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களின் நலனுக்காவும், உயர்கல்வியின் நலனுக்காகவும் எது நல்லது எது தீயது என்று கூறும் துணிவின்றி இருப்பது வருந்ததக்கது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வியின் நலனுக்காக பல்கலை. வேந்தரும் (ஆளுநர்), இணைவேந்தரும் (உயர்கல்வி அமைச்சர்) முரணான போக்கை கைவிட்டு, இணைந்து செயல்படுவது முக்கியமானது.''












Click it and Unblock the Notifications