பெங்களூர் புகழேந்தி வழக்கு: ஓபிஎஸ், எடப்பாடி நேரில் ஆஜராக வேண்டும்-சிறப்பு நீதிமன்றம் திட்டவட்டம்
சென்னை: சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதால் நேரில் ஆஜராக விலக்கு கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 14ல் இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
அதிமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அதில் கட்சியின் கோட்பாடுகளுக்கும், கட்சி விரோத செயல்பாடுகளுக்கும் காரணமாக இருந்ததால் நீக்கம் என கூறப்பட்டிருந்தது.

அவதூறு சட்டம்
இந்த காரணம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் , ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விலக்கு அளிக்க கோரிக்கை
இந்த வழக்கில் இருவரும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால் ஆஜராக இயலவில்லை என்றும், இன்று ஒரு நாள் ஆஜராக விலக்கு கோரியும் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நேரில் ஆஜராக உத்தரவு
அதை ஏற்க நிராகரித்த நீதிபதி, சம்மன் அனுப்பி முதல் முறை ஆஜராக விலக்கு அளிக்க முடியாது என கூறி, அந்த மனுக்களை நிராகரித்ததுடன், செப்டம்பர் 14ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளார். இதனால், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பேட்டியளித்த புகழேந்தி
"அதிமுக கூட்டணியிலிருந்து கொண்டு 23 இடங்களைப் பெற்றுக்கொண்ட அன்புமணி ராமதாஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பற்றி தேவையில்லாத கருத்துகளைக் கூறி வருகிறார். எங்கள் கட்சியின் தலைவர்களைப் பற்றிப் பேசுவது முறையானதல்ல. பாமகவால் எந்த வகையிலும் எந்த உதவியும் இல்லை. ஒ.பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால்தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன்தான் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா எம்பி ஆனார். அதனால், அன்புமணி அதிமுக பற்றி தவறாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதன்பிறகுதான் அவரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்தது.

அன்புமணி ராமதாஸ் பற்றிய பேச்சு
அதிமுக சார்பில் தொலைக்காட்சி வாத, விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அனல் பறக்கப் பேசி வந்தவர் பெங்களூர் புகழேந்தி. ஆரம்பத்தில் சசிகலா ஆதரவாளராக இருந்தார். பிறகு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நெருக்கமானவராக மாறினார். ஆனால், அன்புமணி ராமதாஸ் தொடர்பாக புகழேந்தி அளித்த பேட்டி தான் இவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதற்கு வழிவகை செய்தது என்று அப்போது கூறப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications