பணம் செல்லாது என்றார்கள்.. இப்போ வங்கிகளே.. பாக்கெட்டில் கைவிடவே பயப்படும் மக்கள்.. என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் என்னதான் நடக்கிறது.. சில நேரம் நாம் வைத்திருக்கும் பணம் செல்லாமல், ஒரே நாள் இரவோடு மாயமாகி போய்விடுகிறது.. இன்னும் சில நாள்.. வங்கிகளே திவாலாகி, டெபாசிட்டில் வைத்திருந்த பணத்தை கூட எடுக்கமுடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

இப்படியான ஒரு 'பொருளாதார அசாதாரண' சூழ்நிலையில்தான் மக்கள் தங்கள் பையிலிருந்து பணத்தை எடுப்பதற்கு கூட பயப்படுகிறார்கள். ஒட்டுமொத்த வணிகத்தையும் இது பாதித்துக் கொண்டிருக்கிறது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி யாரும் மறந்திருக்க முடியாது. திடீரென தொலைக்காட்சியில் தோன்றினார், பிரதமர் நரேந்திர மோடி. அந்த காலகட்டத்தில், புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

பணம் மாயம்

பணம் மாயம்

ஏடிஎம்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டதால், அடுத்த சில நாட்கள் ஏடிஎம்கள் மூடப்பட்டன. ஏற்கனவே தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளிடம் உரிய கணக்கு காட்டி சமர்ப்பித்து புது நோட்டுகள் பெறலாம் என்றும் அறிவித்தார் மோடி. ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் அடுத்தடுத்த நாட்களில் கூட்டமோ கூட்டம். மக்கள் பட்டபாடு சொல்லி மாளாது. காத்திருந்த பல மக்கள் மாண்டனர். கையில் பணமிருந்தும் ஒரே நாள் இரவில் ஏழைகளாகினர் இந்திய திருநாட்டின் மக்கள்.

தூவானம் விடவில்லை

தூவானம் விடவில்லை

மக்கள் கையில் பணம் பழையபடி புழங்குவதற்குள் ஓராண்டு சட்டென கடந்து போய்விட்டது. அதுமட்டுமா.. இப்படி ஒரு விசயமே தெரியாமல், சாவகாசமாக சில மாதங்கள் கழித்து, முதியோர்கள், அதிலும், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிகள் தங்கள் பணத்தை வெளியில் எடுத்து செலவிட போகும்போது அது செல்லாது என்று அறிவிக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சியில் உறைந்து போன சம்பவங்களுக்கும், இந்த நாடு சாட்சி ஆனது.

வங்கிகள் பலப்படும் என்றனர்

வங்கிகள் பலப்படும் என்றனர்

பண பரிமாற்றத்தை குறைத்து, அனைத்து நிதி பரிமாற்றங்களையும், வங்கிகள் மற்றும் டிஜிட்டல் முறையில் மாற்றினால்தான் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று அப்போது காரணம் சொல்லப்பட்டது. ஆனால், வங்கிகளே வரிசையாக திவாலாகி கொண்டிருக்கக்கூடிய கொடுமையை என்னவென்று சொல்வது? ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்கும் போது வீழ்ச்சியடையாத, வங்கிகள், பணமதிப்பிழப்பு பிறகுதான் படு பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கின்றன. இது யதேர்ச்சையானதா? அல்லது சங்கிலி தொடர்போன்றதா என்பதே சாமானியர்கள் கேள்வி.

பிஎம்சி வங்கி

பிஎம்சி வங்கி

கடந்த ஆண்டு மும்பையில், பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடு இருப்பது தெரியவந்ததால் அந்த வங்கி நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. லட்சம் லட்சமாக பணத்தை டெபாசிட் செய்து வைத்திருந்தவர்கள் கூட, திருமணம் உள்ளிட்ட, அவசர தேவைக்கு பணம் இன்றி அல்லாடி போயினர். எத்தனையோ வாடிக்கையாளர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

எஸ் வங்கி

எஸ் வங்கி

இதோ இப்பொழுது YES BANK, வராக்கடன் அதிகமானதால் ரிசர்வ் வங்கி தலையிட்டு நிர்வாகத்தை கையில் எடுத்துள்ளது. பணத்துக்கு தான் திடீரென மதிப்பு இல்லாமல் போனது என்றால், வங்கி நிர்வாகம் மீதான மதிப்பும் சீர்குலைந்து விட்டது. இத்தனையையும் நிர்வகிக்கும் ரிசர்வ் வங்கி மட்டும் இந்த சர்ச்சைகளில் இருந்து தப்பியதா என்றால், அதுவும், கிடையாது. அங்கும் இதற்கு முன்பாக ஏகப்பட்ட உரசல்கள்.

ஆர்பிஐ நிலைமை

ஆர்பிஐ நிலைமை

ஒரு ஆளுநருக்கு பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை, மற்றொரு ஆளுநர் மத்திய அரசுடன் மோதலால் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார். துணை ஆளுநரும் பதவியை துறந்தார். இப்படியான சூழ்நிலையில், மக்கள் ஒருவித நிதி சார்ந்த அச்சத்துடன் வாழ தொடங்கியுள்ளனர். நாம் இது தொடர்பாக சில வியாபாரிகளிடம் கருத்து கேட்டோம்.

 ஜூஸ் கடையில் கூட வியாபாரம் இல்லை

ஜூஸ் கடையில் கூட வியாபாரம் இல்லை

கோடை காலம்தான் துவங்கிவிட்டதே, இனி நீங்க பிஸியாத்தான் இருப்பீங்க, நம்மகிட்டல்லாம் பேச டைம் இருக்கவா போகுது என ஒரு ஜூஸ் வியாபாரியிடம், கேஷுவலாக பேச்சுக்கொடுத்தோம். ஆனால் வந்த பதிலோ அதிர்ச்சி ரகம். "அதை ஏன் கேக்குறீங்க. வியாபாரமே இல்லைங்க. இப்படி நடப்பது, இதுதான் முதல் முறை. ரூபாய் நோட்டு தடை, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால், வேறு தொழில் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. ஜூஸ் கடையில் கூட சரியாக வியாபாரம் நடக்கவில்லையே. எங்களுக்கு அதுதான் புதிராக இருக்கிறது" என்றார் வேதனையுடன்.

பயப்படும் மக்கள்

பயப்படும் மக்கள்

கோடை காலத்தில் கூட ஜூஸ் வாங்க மக்கள் தயாராக இல்லையா. அப்படி, என்ன காரணம் என்று கேட்டோம். "மக்கள் கையில் இருந்து இருபது ரூபாய், முப்பது ரூபாய் செலவிட்டு ஜூஸ் வாங்க கூட தயங்குகிறாங்க. பணத்தை எப்படியாவது சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும், பணம் சம்பாதிப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமாகிடுச்சி.. அப்படீன்னு அவுங்க நினைக்கிறாங்க. வேலை வாய்ப்புகளும் குறைந்துபோயிடுச்சி. இருக்கும் பணத்தை சேர்த்து வைத்தது தப்பித்துக்கொண்டால் போதும் என்ற மனநிலையில்தான் மக்கள் இருக்காங்க. இதுதான் எங்களை போன்ற சாமானியர்களின் வியாபாரத்தில் கூட பாதிப்பை கொடுத்துள்ளது" என்றார் வருத்தமாக.

மக்கள் செலவிட வேண்டியது அவசியம்

மக்கள் செலவிட வேண்டியது அவசியம்

"தேவைதான் அளிப்பை தீர்மானிக்கிறது" என்பது தான், பொருளாதாரத்தின் அடிப்படை விதி. மக்கள் அதிக அளவு பொருட்களை வாங்கி அந்த பொருட்கள் மீது தேவை அதிகரிக்கும் போது, இயல்பாகவே, அந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும். இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். வேலை வாய்ப்பு அதிகரித்தால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மீண்டும் மக்கள் பொருட்கள் வாங்குவார்கள். இது ஒரு சக்கரம் போல சுற்றி வரக்கூடிய நிகழ்வு. ஆனால் இந்த சக்கரத்தின் அச்சாணியான பணமும், வங்கிகளுமே ஆட்டம் கண்டுப்போயுள்ளதால்தான், மக்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க கூட பத்து முறை யோசிக்கிறார்கள். இது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+