பார்த்து செய்யுங்கள் என விஜய் கூறவில்லை- அந்த பெருந்தன்மை எனக்கு பிடித்தது- பாக்யராஜ்
Recommended Video
சென்னை: எனது கதை என்பதற்காக பார்த்து செய்யுங்கள் என விஜய் என்னிடம் கேட்காதது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் பாக்யராஜ் தெரிவித்தார்.
நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்த படத்தில் அரசியல் குறித்து பேசப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்நிலையில் சர்கார் படம் தன்னுடையது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதனிடையே வருண் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எனது செங்கோல் என்ற படத்தின் கதையின் கருதான் சர்கார் படம் என்று வருண் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து சர்கார் படத்தில் இயக்குநர் தரப்பும் வருண் தரப்பும் சமரசமாவதாக ஒப்புக் கொண்டனர்.
[சர்காருக்கு எதிராக செங்கோலை உயர்த்திய பாக்யராஜ்.. அசால்ட்டாக செய்த ஒரு விரல் புரட்சி! ]
மகன் மீது விமர்சனம்
கதை திருட்டுக்கு எதிராக நடிகர் பாக்யராஜ் கடுமையாக போராடினார். இதுகுறித்து அவர் கூறுகையில், சர்கார் பட பிரச்சினை சுமூகமாக முடிந்தது. நான் ஏதோ தவறு இழைத்து விட்டதை போல் என்னையும் எனது மகனையும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
முடிவெடுங்கள்
என் மகனும் விஜய் ரசிகன்தான். தனது கதை என்பதற்காக விஜய் பார்த்து செய்யுங்கள் என கூறவில்லை. எது நியாயமோ அதன்படி முடிவெடுங்கள் என்று கூறிய பெருந்தன்மை எனக்கு பிடித்தது. தான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என முருகதாஸ் தெரிவித்திருந்தார்.
உழைப்பு
விஜய்யை மனதில் வைத்துக் கொண்டுதான் செங்கோல் படத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வருண் எழுதியுள்ளார். சர்கார் கதையின் கரு வருணுடையதுதான். படத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன் என்றார் முருகதாஸ். அதேபோல் வருணும் அந்த கதைக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உழைத்திருந்தார் என்பதையும் மறுக்க முடியாது.
டைட்டிலை பாருங்கள்
வருணை விட எனக்கு முருகதாஸே நன்கு அறிமுகமானவர். இருந்தாலும் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவருடன் நின்றேன். இன்று சுமூகமாக தீர்வு காணப்பட்டது. என்ன சமரசம் என்பதை படத்தின் டைட்டிலை பார்த்துதெரிந்து கொள்ளுங்கள் என்றார் பாக்யராஜ்.
விஜய் சர்கார் அமைக்க
இதுகுறித்து வருண் கூறுகையில், விஜய் "சர்கார் அமைக்க எனது செங்கோலை பரிசாக தருகிறேன். செங்கோல் படத்துக்கு அங்கீகாரம் கேட்டுத்தான் வழக்கு தொடர்ந்தேன். சர்கார் படத்துக்கு தடை கேட்கவில்லை என்றார் வருண்.