வேற லெவலில் மாறப்போகும் ஓசூர், திருப்பூர், மதுரை - சென்னை போல் எம்.டி.ஏ கொண்டு வர மசோதா நிறைவேற்றம்
சென்னை: ஓசூர், திருப்பூர், மதுரையில் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை ஏற்படுத்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
சென்னையில் கட்டிடங்கள், குடியிருப்புகள் போன்றவற்றை சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் நிர்வகித்து வருகிறது. அதுதொடர்பான அனுமதியையும் சி.எம்.டி.ஏவிடம் வாங்க வேண்டும்.
வீட்டுவசதித்துறை அமைச்சரை தலைவராக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதேபோல், வளர்ச்சியடைந்து வரும் மாநகராட்சிகளிலும் வளர்ச்சிக்குழுமங்களை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
புதிய சாலையை திறந்து வைத்த சிறுமி... வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமியின் பெருந்தன்மை..!
சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
அதன் அடிப்படையில் வளர்ச்சியடைந்து வரும் ஓசூர், திருப்பூர், மதுரை மாநகரங்களில் பெருநகர வளர்ச்சிக்குழுங்கள் அமைக்க அரசு திட்டமிட்டது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி சென்னையை போல் ஓசூர், திருப்பூர், மதுரை மாநகராட்சிகளில் பெருநகர வளர்ச்சிக்குழுமங்களை அமைக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலமாக சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஓசூருக்கு மேலும் திட்டங்கள் அறிவிப்பு
மேலும் சட்டப்பேரவையில் வீட்டுவசதித் துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி "ஓசூரில் குடியிருப்புகள் கட்டப்படும். கோவை, திருப்பூர், ஓசூர் மற்றும் 17 நகரங்களில் முழுமைத் திட்டங்கள் திருத்தம் செய்யப்படும். மதுரை தோப்பூர் - உச்சப்பட்டி துணைநகரம், புதுநகர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
சென்னை கடற்கரை
பன்னடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு அளிக்கப்படும்.
சென்னை கடற்கரை பகுதி சீரமைக்கப்பட்டு புத்தாக்கம் செய்யப்படும். சென்னை போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தளப்பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நெரிசலை குறைக்க ஆய்வு செய்யப்படும்.
சென்னை புறநகர்
செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்படும். திருவான்மியூர், சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை அண்ணாநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம், பருத்திப்பட்டில் அலுவலகங்களுடன் சேர்ந்த வணிக வளாகம் அமைக்கப்படும். திருமங்கலத்தில் வணிக வளாகங்கள் கட்டப்படும். கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையமும் போரூரில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
திருச்சி, சேலத்தில் நகர்புற வளர்ச்சிக் குழுமம்
நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு குடியிருப்பு கட்டண சலுகை வழங்கப்படும். தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம் 1971-ஐ மறு ஆய்வு செய்யப்படும். திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் பகுதிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள் ஏற்படுத்தப்படும். விழுப்புரம் மாவட்டம் சாலைமேட்டில் குடியிருப்புகள் கட்டப்படும். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் சர்வீஸ் அபார்ட்மெண்ட் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.
பழுதடைந்த வாடகை கட்டிடங்கள்
50,000 முதல் 99,999 வரை கொண்ட 71 நகரங்களுக்கான முழுமைத் திட்டங்கள் தயாரிக்கப்படும். கட்டிட திட்டங்களுக்கு ஒப்புதல்கள் பெறும் வழிமுறைகள் நெறிப்படுத்தப்படும். 2 வது முழுமைத் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும். TNHB குடியிருப்பு வளாகங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும். பழுதடைந்து காணப்படும் வாடகை குடியிருப்புகள் மறுகட்டமைப்பு செய்யப்படும்.