போகியில் பிறந்த ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்! டீ கடை டூ முதல்வர்! அரசியலில் சாதித்தது, சறுக்கியது!
சென்னை : தமிழக முன்னாள் முதல்வரும் தற்போது அதிமுகவில் தனி பிரிவாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிறந்தநாள் காண்கிறார். போகியில் பிறந்த பன்னீர்செல்வம் அரசியலில் சாதித்ததும் சறுக்கியதும் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழக அரசியலில் அதுவரை முதல்வராக இருந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் மிகப் பிரபலமாக இருந்தவர்கள் திரைத்துறையில் அல்லது அரசியலிலோ மிகுந்த ஈடுபாடு காட்டி அதில் பெற்ற வெற்றியின் மூலம் அரசியலில் தடம் பதித்தவர்கள்.
அந்த வகையில் பக்தவச்சலம், காமராஜர், ராஜாஜி, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா தொடங்கி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை என ஏதோ ஒரு வகையில் அரசியலோடு அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும்.
இரண்டில் ஒன்று பார்க்க முடிவு.. மதுரையில் போட்டி பொதுக்குழு! பரபரக்கும் பன்னீர்செல்வம் டீம்!
ஓ.பன்னீர்செல்வம்
ஆனால் அரசியலின் அடிமட்டத்திலிருந்து முதல்வர் பதவி வரை அலங்கரித்தவர் என்றால் அதில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. தேனியின் சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை பதவி ஏற்றிருக்கிறார். அது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அரசியலில் உச்சத்தை தொட்ட ஓ.பன்னீர்செல்வம் அதே நேரத்தில் பல சறுக்கல்களையும் சந்தித்திருக்கிறார். முதல்வராக அமர வைத்து அழகு பார்த்த அதிமுக அவரை ஒரு காலத்தில் துரத்தி அடிக்கவும் செய்திருக்கிறது.
சொந்த வாழ்வு
இப்படி அரசியலில் ஏறுமுகம் இறங்குமுகமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பிறந்தநாள் இன்று. அவர் வாழ்வில் நடந்த சில முக்கிய தருணங்களை பார்க்கலாம். ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம் என்ற முழு பெயர் கொண்ட ஓபிஎஸ் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1951 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிறந்தவர். இவரது மனைவி விஜயலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவரது மகன்களான ரவீந்திரநாத் குமார் ஜெய பிரதீப் ஆகியோரும் தீவிர அரசியலில் இருக்கின்றனர்.
முதல்முறை முதல்வர்
அதற்கு முன் உள்ளூர் அரசியலில் தீவிரமாக இருந்து வந்த அவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரிய குளம் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். முதல் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரான பெருமை அவருக்கே உண்டு. 2001 தேர்தலில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவி ஏற்றார். அதற்கு பிறகு ஜெயலலிதா சிறைக்குச் சென்ற நிலையில் தமிழக முதல்வராக கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இருந்தால் அதற்கு பிறகு பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.
3 முறை பதவி
2006 இல் அதிமுக ஆட்சியில் இழந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவராகவும் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார் 2011ல் நிதி அமைச்சராகவும் அவை முன்னவராகவும் பொறுப்பேற்ற அவர் தமிழ்நாடு முதலமைச்சராக கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பணியாற்றியிருக்கிறார். 2016 இல் மீண்டும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நிதியமைச்சர் அவை முன்னவர் தமிழக முதலமைச்சர் தமிழக துணை முதலமைச்சர் என பல பதவிகளை வகித்திருக்கிறார். மூன்று முறையும் ஜெயலலிதா அவரை கைகாட்டியதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
அரசியல் உச்சம்
2001 ஆம் ஆண்டில் டான்சி வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது அப்போது சசிகலாவின் பரிந்துரைப்படிதான் இவர் முதல்வராக பதவி ஏற்றதாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்ற நிலையில் அப்போதும் ஓ பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா இறந்த பிறகும் ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். இப்படி அரசியலில் உச்சபட்ச பகுதியான முதல்வர் பதவியை மூன்று முறை வகித்தவர் ஓ பன்னீர்செல்வம்.
சறுக்கல்கள்
ஜெயலலிதா மறைவுக்கு முன்னதாக ஐவர் அணி என்ற அதிமுகவின் அதிகாரமிக்க குழுவில் மூத்தவராக இருந்த ஓபிஎஸ் அதற்குப் பிறகு கடைசி நேரத்தில் ஜெயலலிதாவாலே ஓரம் கட்டப்பட்டதாகவும் அதற்கும் சசிகலா தான் காரணம் எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பதவி ஏற்ற அவர் சசிகலாவின் வற்புறுத்தலால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அது அவர் சந்தித்த இரண்டாவது சறுக்கல். இதனையடுத்து தர்மயுத்தம் தொடங்கி சசிகலா சிறைக்கு சென்றபின் எடப்பாடி பழனிச்சாமி உடன் கரம் கோர்த்து துணை முதல்வராக இருந்தார்.
ஓரம்கட்டப்பட்ட ஓபிஎஸ்
அதே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவின் அடுத்த அதிகாரமிக்க பரவியான பொருளாளர் பதவியை ஓபிஎஸ் அலங்கரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஜெயலலிதா இருந்த காலத்தில் மிக அதிகாரமிக்க நபராக ஓ.பன்னீர்செல்வம் அதற்குப் பிறகு அடுத்தடுத்து சறுக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. தற்போது அது கட்சியை விட்டு விலகி வைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. எடப்பாடியுடன் கரம் கோர்த்து கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு பெற்றுக் கொண்ட ஓபிஎஸ் அதற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களால் ஓரங்கட்டப்பட்டார்.
எடப்பாடியின் எழுச்சி
தொடர்ந்து கட்சியிலும் ஆட்சியிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்ஐ ஓரம் கட்ட தயங்கவில்லை. எப்படியும் தனக்கு எதிர்காலத்தில் போட்டியாக வருவார் என்பதை உணர்ந்து இருந்து எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவு வட்டத்தை பெறுக்கிக் கொண்டு, கட்சி நிகழ்வுகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டார் அதிமுக ஆட்சியை இழக்கும் தருவாயில் முதல்வர் வேட்பாளர் பதவியை ஆதரவாளர்கள் ஆதரவு இல்லாததால் எடப்பாடிக்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தது. தொடர்ந்து ஆட்சியை இழந்த பிறகும் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்தார்.
அடுத்து என்ன?
இப்படி கட்சியில் சிறிது சிறிதாக ஆதரவு வட்டத்தை விளக்கத் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் இறுதியில் அதிமுக பொதுக்குழுவில் கட்சியை விட்டு துரத்தி அடிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார். பொதுக்குழுவில் கலந்து கொண்ட அவரை எடப்பாடியின் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்ததோடு துரோகி துரோகி என முழக்கமிட்டதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. தொடர்ந்து தற்போது அதிமுக தலைமைக்காக போராடிவரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த பொங்கல் கை கொடுக்குமா கடந்த காலங்களைப் போல அவரது செல்வாக்கு அதிகரிக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.