ஆளுநர் டீ விருந்தை விசிக புறக்கணித்தால் செலவு மிச்சம்.. அதே வார்த்தையை மீண்டும் சொன்ன அண்ணாமலை!
சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை விசிக புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சித்திரை நாள் விழாவை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தபோதும் இதேபோன்று 'டீ செலவு மிச்சம்' என அண்ணாமலை கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றன.
அண்மையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், குடியரசு தின விழா தேநீர் விருந்தை திமுகவின் கூட்டணி கட்சியான விசிக புறக்கணித்துள்ளது.

விசிக புறக்கணிப்பு
குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு விசிகவைச் சேர்ந்த நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக விசிக முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரின் போக்கை கண்டிக்கும் வகையில், அவரது தேநீர் விருந்து அழைப்பைப் புறக்கணிப்பது என விசிக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். மேலும், தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

டீ செலவு மிச்சம்
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா விருந்திலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விசிக புறக்கணித்தால் டீ செலவு மிச்சம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தோல்வி பயம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. இடைத்தேர்தலை பொறுத்தவரை பணத்தைக் கொட்டி ஆளும் கட்சியினர் வெல்வார்கள். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே, திமுக வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறது. காரணம் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மக்களின் கோபத்துக்கு திமுக ஆளாகியுள்ளனர்.

எங்களுக்குத் தெரியும்
திமுகவை எதிர்த்து போட்டியிடும் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். நமது கூட்டணி வேட்பாளர் வலுவாக இருக்க வேண்டும். பாஜகவின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் தேர்தல் எது என்பது எங்களுக்கு தெரியும், எந்த தேர்தலில் பலப்பரீட்சை நடத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதில் பாஜக களமிறங்கும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் எங்களுடையது.

பதில் இல்லை
மக்களை அடிமை போல நடத்துவதுதான் திமுக. திமுக இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி சொன்னதைவிட அதிக அளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளார். சேது சமுத்திர திட்டம் குறித்து பாஜக எழுப்பிய கேள்விக்கு இதுவரை திமுக பதில் அளிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அன்று சொன்ன அதே வார்த்தை
மேலும், குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரலில் சித்திரை நாள் விழாவையொட்டி அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்த விருந்தை ஆளும் திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. அப்போதும் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணியினர் புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம், மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது என அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications