2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி தானா? போட்டு உடைத்த அமித்ஷா!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்பாக பேசி வருகிறது என்றும் கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் உரிய தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில் முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறி வந்த அதிமுக இப்போது திமுக தான் எங்கள் எதிரி என்று கூறி வருகிறது.
தமிழகத்தில் வரும் 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் திமுக தலைமையில் வலிமையான கூட்டணி நீடிக்கிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில் தனித்தனியாக சிதறி கிடக்கின்றன. இது ஆளும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. போதாக்குறைக்கு விஜய்யும் களம் காண்கிறார்.

இத்தகைய சூழலில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம் பெறலாம் என்று பேச்சு பலமாக அடிபட்டுள்ளது.
அமித்ஷாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையக் கூடியது. எந்த ஒரு கூட்டணியும் நிரந்தரமாக இருப்பது இல்லை என்று மட்டும் தெரிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி மறுக்கவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைவர்களும், பாஜக உடனான கூட்டணியை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று சொல்லி வந்த அதிமுக தலைவர்களின் பேச்சில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவை தவிர தங்களுக்கு எந்த கட்சியும் எதிரி இல்லை என்று அதிமுக கூறி வருகிறது. இந்த நிலையில்தான், டெல்லியில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, அதிமுக கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அமித்ஷா கூறியதாவது:-
"2026 சட்டசபை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்பாக பேசி வருகிறது. கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் உரிய தகவல்கள் வெளியிடப்படும். தற்போது பேச்சுவார்த்தை திருப்திகரமாக சென்று கொண்டு இருக்கிறது" என்றார். மேலும் திமுக அரசை கடுமையாக விமர்சித்த அமித்ஷா கூறியதாவது:- திமுக அரசின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வேலை வாய்ப்பு இல்லை. தொழிற்சாலைகள் வெளியேறி வருகின்றன.
தமிழ் நலனுக்கு எதிராக திமுக உள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வரவில்லை. புத்தகத்தைகூட தமிழில் மொழி பெயர்க்கவில்லை. திமுக ஊழலில் தான் மிதக்கிறது. இதன் காரணமாகவே தொழிற்சாலைகள் வெளி மாநிலங்கள் செல்கின்றன. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது. இதை என்னால் உறுதியாக கூற முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications