“பவர் கட்” - தலைவர் அண்ணாமலைதான்! ஆனால்.. “கொம்பை” வெட்டிய பாஜக! மீண்டும் கமலாலயத்தில் எல்.முருகன்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் அடுத்தடுத்த செயல்பாடுகளால் தேசிய தலைமை அதிருப்தியில் இருந்ததாகவும் இதன் காரணமாக அவருக்கான அதிகாரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கரூரை சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து 2019 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகின.
கடந்த 2020 ஆம் ஆண்டு முரளிதர் ராவ், சி.டி.ரவி, எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சில் போட்டியிட்ட அண்ணாமலை 24,816 வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.
வழிபடவில்லை என்றாலும் பரவாயில்லை.. முதல்வர் வாழ்த்தாவது கூறவேண்டும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
தமிழ்நாடு பாஜக தலைவர்
இதன் பின்னர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2021 ஜூலை மாதம் தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அண்ணாமலை. தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும், மத்திய அரசின் செயல்பாடுகளை பிரபலப்படுத்தியும் பேசி வருகிறார் அண்ணாமலை.
நிர்வாகிகள் அதிருப்தி
தமிழ்நாடு பாஜகவில் பல ஆண்டுகளாக அங்கம் வகிக்கும் பல மூத்த தலைவர்களை வைத்துக்கொண்டு அண்ணாமலையை தலைவராக்கியது மாநில நிர்வாகத்திற்கு உள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியது. ஆனால், சர்ச்சைக்குறிய பேச்சுக்களின் மூலமாகவும், தமிழக அரசு மீது வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகளாகும் மக்களின் பரிட்சையமான முகமாகவே மாறிவிட்டார்.
அதிருப்தியில் தலைமை
அண்ணாமலையின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிக்கு இணையாக பாஜக வளர்ந்துவிட்டதாக ஒருபக்கம் பேச்சுக்கள் அடிபட்டாலும், அதன் பின்விளைவுகளால் அக்கட்சித் தலைமை அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது. கே.டி.ராகவன் வீடியோ சர்ச்சையில் அண்ணாமலையின் பங்கு இருப்பதாக மதன் தெரிவித்தது, தஞ்சை பள்ளி மாணவி மரண வழக்கில் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது, பிடிஆர் கார் மீது காலணி வீசியது தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோ வெளியானது போன்றவற்றால் அக்கட்சித் தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம்.
அதிரடி நடவடிக்கை
இந்த நிலையில்தான், அண்ணாமலையின் தலைமை பதவியை பறிக்காமல் அதிகாரங்களை குறைக்கும் முடிவை அக்கட்சி எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனையே மீண்டும் தமிழ்நாடு பாஜகவை கவனித்துக்கொள்ளும் வகையில் அவருக்கு கமலாலயத்தில் தனி அலுவலகமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கமலாலயத்தில் எல்.முருகன்
பாஜக ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் கேசவ விநாயகம் இருந்த அறை தற்போது எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இன்று காலை நடைபெற்ற எல்.முருகன் அறை திறப்பு பூஜையில் அண்ணாமலை, கரு.நாகராஜன், கேசவ விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் இனி தமிழ்நாடு பாஜக தொடர்பான முடிவுகளை எல்.முருகனே எடுப்பார் என்று கூறப்படுகிறது.