குஜராத் மாடலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய பாஜக.. கல்லூரிகளில் தூவப்படும் "தாமரை விதை!"
சென்னை: குஜராத்தைபோல் தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்களை பாஜகவில் சேர்க்க பல்வேறு வியூகங்களை வகுத்து அதற்கான வேலைகளை அக்கட்சி தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறைக்கும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக பொறுப்பு வகிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே உரசல்போக்கு தொடர் கதையாகி இருக்கிறது.

பொன்முடி குற்றச்சாட்டு
அண்மையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தன்னிடம் கேட்காமல் பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கவுரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். பாஜகவை ஆளுநர் பிரச்சாரம் செய்வது போல் நடப்பதாக பொன்முடி குற்றம்சாட்டி இருந்தார்.

ஆளுநர், எல்.முருகன் பேச்சு
இதனை தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், திராவிடர், ஆரியர் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. அதே விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், தமிழை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பிரபலப்படுத்துவதாக கூறியதுடன், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

செல்பி வித் அண்ணாமலை
தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு வினாத் தாளிலும் சாதி குறித்து இடம்பெற்ற கேள்வி நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே நாளில் திருப்பூரில் "செல்பி வித் அண்ணா" என்ற பெயரில் அண்ணாமலை முகமூடி அணிந்த பாஜகவினர் கல்லூரி வாயில்களில் நின்று மாணவ மாணவிகளுடன் செல்பி எடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

மாணவிகள் வாக்குவாதம்
இது தொடர்பான பாஜகவின் விளம்பரத்தில் 2 கல்லூரிகளின் பெயர்கள் இடம்பெற்ற நிலையில், தங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல் பாஜக பெயரை பயன்படுத்தி இருக்கிறது என்று கல்லூரிகளின் முதல்வர்கள் குற்றம்சாட்டினர். அதையும் மீறி நேற்று கல்லூரி வாசல்களில் நின்று கட்சிக்கு ஆட்சேர்க்கும் பணியில் ஈடுபட்ட பாஜகவினருடன் கல்லூரி மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரிகளுக்கு குறி
ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளிலும் செயல்படத் தொடங்கி இருக்கிறது. அதன் மூலமாக மாணவர்கள் பாஜகவில் இணைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நேரடியாக இளைஞர்களை கட்சியில் சேர்க்கும் வகையில் கல்லூரிகளை குறிவைத்து இறங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

குஜராத் கல்லூரி
இதேபோன்ற திட்டத்தை இதற்கு முன்பாக குஜராத் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் பாஜக செயல்படுத்தி வெற்றி கண்டது. குஜராத் மாநிலத்தில் கல்லூரி நிர்வாகங்களே மாணவ மாணவிகளை பாஜகவில் சேர சொல்லி சுற்றறிக்கை அனுப்பிய நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறின. கடந்த மாதம் குஜராத்தில் மாணவிகளை கட்சியில் சேருமாறு உத்தரவிட்ட கல்லூரி குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வரின் சுற்றறிக்கை
பாவ்நகரில் அமைந்துள்ள காந்தி பெண்கள் கலை மற்றும் வணிகவியல் கல்லூரியின் முதல்வர் ரஞ்சன்பாலா கோஹில் பாவ்நகர் தொகுதி எல்லைக்கு உட்பட்ட கல்லூரி மாணவிகள் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் ஏஜெண்டுகளாக பணியாற்ற பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் செல்போன்களை எடுத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்காக பாஜகவில் சேர வேண்டும் என்பதால் செல்போன் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை எடுத்து வர வேண்டும் என்று கூறியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications