அதிமுகவை விட பல மடங்கு.. பாஜகவே உண்மையான எதிர்க்கட்சி.. அதிமுகவை சீண்டிய கரு.நாகராஜன்.. மறுபடியுமா?
சென்னை : தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும், மக்களுக்கு குரல் கொடுப்பதில் அவர்களை விடப் பன்மடங்கு பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் பேசியுள்ளார்.
மேலும், திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும், அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் என அனைவரும் கரம் கோர்க்க வேண்டும் என்றும் கரு.நாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் பாஜக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது, எனவே பாஜகவே சிறந்த எதிர்க்கட்சியாக உள்ளது என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பாஜகவே பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பேசியது அதிமுக - பாஜக இடையே சலசலப்புகளை ஏற்படுத்தி ஓய்ந்த நிலையில் மீண்டும் இவ்வாறு பேசியுள்ளார் கரு.நாகராஜன்.

பாஜக கூட்டம்
சென்னையை அடுத்த ஆலந்தூரில் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சக்தி கேந்திர கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் கலந்து கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கரு.நாகராஜன், "வரும் 9 ஆம் தேதி மண்டல ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. 13-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து திரும்பும் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதிமுகவை விட பல மடங்கு
அதிமுக என்பது எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களை விடப் பன்மடங்கு எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் பாஜக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் என எதிலும் மாநில உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என பாஜக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது.

அதிமுகவுக்கு இணையாக
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும், மக்களுக்கு குரல் கொடுப்பதில் பாஜக அதற்கு இணையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே பாஜகவே சிறந்த எதிர்க்கட்சியாக உள்ளது. மாவட்ட அளவில் இருக்கும் பிரச்சனைகளுக்காகவே மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாங்க என்ன சொல்றது
அதிமுகவில் ஏற்பட்டிருக்கிற குழப்பம் முழுக்க முழுக்க உட்கட்சியைச் சேர்ந்தது. அதுபற்றி நாங்கள் கருத்து சொல்ல முடியாது. எல்லோரும் இணைந்து செயல்பட்டால், அதை தமிழக மக்கள் வரவேற்பார்கள் என்பது உறுதி. ஆனால், அவர்களுக்குள் நிலவும் பிரச்சனையால் அவர்கள் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார்கள். அதில் பாஜக எந்த கருத்தும் சொல்ல முடியாது.

திமுகவை வீழ்த்த
திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி மக்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலப் பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். ஆசிரியர்கள் ஒருபுறம் போராடுகிறார்கள். தேர்தல் அறிக்கையில் சொன்னதை திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும்.

பாராட்ட கத்துக்கோங்க
திருமாவளவனுக்கு வேறு வேலை இல்லை. பாஜகவை எதிர்ப்பதுதான் வேலை. தூங்கி எழுந்ததும் பாஜகவை எத்தனை முறை திட்டுவது என நம்பர் போட்டு டிக் செய்து திட்டு வருகிறார். வெற்றிமாறன் சினிமா படம் எடுப்பதை விட்டுவிட்டு திமுகவுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுவது சரியா? மணிரத்னம் ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறார். அதை அனைவரும் பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications